சென்னை உட்பட 10 இடங்களில் 'அம்மா' பெட்ரோல் பங்க்! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் சென்னை, மதுரை உட்பட 10 நகரங்களில் 'அம்மா பெட்ரோல் பங்க்' அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அம்மா குடிநீர், அம்மா உணவகங்கள், அம்மா பசுமை கடைகள், அம்மா மருந்தகங்கள் என ஜெயலலிதாவின் அம்மா என்ற பெயர் பிராண்ட் அடிப்படையில் அதிமுக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், புபதிதாக அம்மா பெட்ரோல் பங்க் அமைக்கப்படும் என அரசு இன்று அறிவித்துள்ளது. தமிழக அரசின், உணவுத்துறை கொள்கை விளக்க குறிப்பில் இத் தகவல் இடம் பிடித்துள்ளது.

இந்த நகரங்கள்
திருவாரூரின் சுந்தர கோட்டை, நாகை கோவில்பத்து, மதுரை கப்பலூர், சேலம் எடப்பாடி, சென்னை நந்தனம், தஞ்சை இரும்பு தலை, வேலூர் அருகே வாணியம்பாடி, விழுப்புரம் வானூர், கரூர் கிருஷ்ணராயபுரம், திருச்சி மணப்பாறை ஆகிய பத்து இடங்களில் பெட்ரோல் பங்க்குகள் அமைக்கப்பட உள்ளன.

முதல்வர் தொகுதி
முதல்வர் தொகுதி, போக்குவரத்து அமைச்சர், உணவுத்துறை அமைச்சரின் சொந்த மாவட்டங்களில் பெட்ரோல் பங்குகள் அமைக்கப்பட்டுள்ளது இதில் கவனிக்கத்தக்கது.

இணைந்து நடத்தும்
இந்த பெட்ரோல் பங்குகள் தமிழக நுகர்பொருள் வாணிப கழகம்-இந்திய ஆயில் கார்பொரேசன் ஆகியவற்றால் இணைந்து அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகள்
பெட்ரோல் பங்க் டீலர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடும்போது வாகன ஓட்டிகள் கஷ்டப்படுவதாகவும், அதை சமாளிக்கவே அரசு சார்பில் இப்படி பெட்ரோல் பங்குகள் அமைக்கப்படுவதாகவும் அரசு அறிவித்துள்ளது.

மலிவு விலை உண்டா?
அதேநேரம், அம்மா பெட்ரோல் பங்குகளில் மாநில அரசின் வரியை நீக்கிவிட்டு மலிவு விலையில் பெட்ரோல், டீசல் வழங்கப்படுமா, அல்லது பிற பங்குகளின் விலை மதிப்பில்தான் இங்கும் சப்ளை செய்யப்படுமா என்பது குறித்த விவரம் அதில் தெரிவிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications