ஜெ., வீடு கோவில்... அம்மா அறை கர்ப்பகிரகம் அங்கே துன்பம் நேர்ந்துள்ளது - விவேக்
ஜெயலலிதா வாழ்ந்த வீடு கோவில் போன்றது, அந்த கோவிலுக்கு துன்பம் நேர்ந்துள்ளது என்று இளவரசி மகன் விவேக் கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வீடு கோவில் போன்றது. இந்த கோவிலுக்கு ஒரு துன்பம் நேர்ந்துள்ளது என்று இளவரசி மகன் விவேக் ஜெயராமன் கூறியுள்ளார்.
வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று மாலை இளவரசி மகள் ஷகிலாவை விசாரணைக்கு அழைத்தனர். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஷகிலாவை அழைத்துக்கொண்டு நேராக போயஸ்தோட்ட வீட்டிற்கு சென்றனர்.
அங்கு சசிகலாவின் அறை, ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனின் அறை உள்பட பல முக்கிய பகுதிகளில் சோதனை நடத்தினர். இது தெரிந்த உடன் இளவரசியின் மகன் விவேக் உள்பட பலரும் போயஸ் தோட்ட வீட்டிற்கு ஓடி வந்தனர். தனது முன்னிலையில்தான் சோதனை நடத்த வேண்டும் என்று விவேக் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
5 மணிநேர சோதனை
கிட்டத்தட்ட 5 மணிநேரம் நடந்த சோதனை அதிகாலை 2 மணிக்கு நிறைவடைந்தது.
இதனையடுத்து இரண்டு பென்டிரைவ்கள், ஒரு லேப்டாப், சில பண்டில்களை கைப்பற்றி எடுத்துச்சென்றனர். அனைவரும் பலத்த பாதுகாப்புடன் காரில் கிளம்பி சென்றனர்.
இளவரசி மகன் விவேக்
சோதனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயா டிவி சிஇஓ விவேக், ஜெயலலிதா அறையில் சோதனை நடத்த நாங்கள் அனுமதிக்கவில்லை என்று கூறினார். எனது அக்கா ஷகிலாவை நேற்று விசாரணைக்கு அழைத்தனர். அங்கிருந்து நேராக இங்கே அழைத்து வந்து விட்டனர் என்றார்.
லேப்டாப், பென் டிரைவ்
நீதிமன்ற உத்தரவு பெற்று போயஸ் கார்டனில் சோதனை நடைபெற்றது. சோதனைக்குப் பின்னர் 2 பென் டிரைவ், 2 லேப் டாப், ஜெயலலிதாவிற்கு எழுதப்பட்ட கடிதங்களை எடுத்து சென்றனர். கடிதங்களை எடுத்துச்சென்றது ஏன் என்று தெரியவில்லை.
சோதனை நடத்த அனுமதிக்கவில்லை
ஜெயலலிதா அறையையில் சோதனை நடத்த நாங்கள் அனுமதிக்கவில்லை. அந்த அறை தவிர, போயஸ் கார்டன் வீடு முழுவதும் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தெரிவித்த விவேக், ஜெயலலிதா வாழ்ந்த கோயிலுக்கு ஒரு துன்பம் வந்துள்ளதாக கூறினார்.
பார்க்கும் போதே துன்பம்
புரட்சி தலைவி அம்மாவின் வழியில் நடப்பதாக எல்லோரும் கூறுகிறார்கள். ஆனால்
ஜெயலலிதா வாழ்ந்த கோவிலுக்கு துன்பம் நேர்ந்துள்ளது. நான் உட்பட பல கோடி தொண்டர்கள் பார்த்துக்கொண்டிருக்கும் போதே இது போன்று நடப்பது மிகவும் வேதனையான விசயம் என்றும் விவேக் கூறியுள்ளார்.