மதவாதத்தை எதிர்த்து போராட கி.வீரமணி தலைமையில் புதிய இயக்கம்
மதவாதத்தை எதிர்த்து போராட அரசியலுக்கு அப்பாற்பட்டு புதிய இயக்கம் ஒன்றை கி.வீரமணி தலைமையில் இயக்கம் தொடங்கவுள்ளது.
சென்னை: திராவிடக் கட்சிகளை ஒழிக்க நினைக்கும் மதவாதத்தை எதிர்த்து போராட புதிய இயக்கம் ஒன்று தொடங்கப்படுவதாக கி.வீரமணி தெரிவித்தார்.
இதுதொடர்பாக சென்னை பெரியார் திடலில் திங்கள்கிழமை ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார்.அப்போது அவர் பேசுகையில் மாநில உரிமை, மதசார்பின்மை, சமூக நீதியை காக்க ஜனநாயக பாதுகாப்பு உரிமை கூட்டமைப்பு என்ற புதிய இயக்கம் தொடங்கப்படவுள்ளது.
இதுமுழுக்க முழுக்க அரசியலுக்கு அப்பாற்பட்ட இயக்கமாகும். பிரதமரும், மத்திய அமைச்சர்களும் அயோத்தியில் ராமர் கோயிலை கட்டுவோம் என்று பகீரங்கமாக பேசுகின்றனர். மதசார்பின்மை, சமூக நீதி என்கிற இரு பெரும் முக்கிய பிரச்சினைகளில் மத்தியில் அமைந்துள்ள பாஜக அரசு எதிராக செயல்படுகிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் சித்தாந்தத்தின் அடிப்படையில்தான் பாஜக செயல்படுகிறது.
அயோத்தியில் ரூ.151 கோடி செலவில் 25 ஏக்கர் பரப்பில் ராமாயண அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளனர். கன்னியாகுமரியில் ரூ.15 கோடியில் அத்தகைய கண்காட்சியை அமைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். பாஜக அரசானது சமூக நீதிக்கு எதிராக திட்டமிட்டு செயல்படக்கூடியது என்பதை வெளிப்படையாகவே காட்டியுள்ளது.
எனவே இது போன்ற விஷயங்களில் மாநில உரிமை, சமூக நீதி, மதசார்பின்மையை காக்க அனைவரும் இணைந்து ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு என்ற புதிய இயக்கத்தை தொடங்கி இருக்கிறோம் என்றார் அவர்.
இந்த கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், தி.மு.க. துணை பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.