எல்லா துறைகளிலும் ஊழல்... கமல் சொன்னது உண்மைதானே! அன்புமணி பரபரப்பு பேட்டி
தமிழகத்தின் எல்லா துறைகளிலும் ஊழல் நடக்கிறது என்று நடிகர் கமல்ஹாசன் கூறியது உண்மைதானே என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தின் எல்லா துறைகளிலும் ஊழல் அதிகரித்துள்ளது, அதைப்பற்றி புகார்கள் அளியுங்கள் என்று கமல்ஹாசன் சொன்னது சரிதானே என்று பாமக இளைஞரணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அன்புமணி நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
"ஜனாதிபதியை நேரில் சந்தித்து, நீட் தேர்வு சட்ட மசோதா நிலுவையில் உள்ளது. உங்கள் பதவி காலம் முடிவதற்கு முன் மத்திய அரசிடம் பேசி சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் தரவேண்டும்" என்று கோரிக்கை வைத்தேன்.
மத்திய அரசு சட்ட மசோதாவை அனுப்பினால் நிச்சயமாக செய்வேன் என்று என்னிடம் பிரணாப் தெரிவித்தார். இந்த ஆண்டு 9 லட்சம் மாணவர்கள் சமச்சீர் பாட திட்டத்தின் கீழ் தேர்வுகளை எழுதி உள்ளார்கள். 16 ஆயிரம் மாணவர்கள்தான் சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தின் கீழ் தேர்வு எழுதி இருக்கிறார்கள்.
ஆனால் நீட் தேர்வில் கேள்விகள் சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டு அரசிடம் உள்ள 3,372 மருத்துவ இடங்களில் 3 ஆயிரம் இடங்கள் சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தில் படித்தவர்களுக்குத்தான் கிடைக்கும். மற்ற இடங்கள் தான் சமச்சீர் பாட திட்டத்தின் கீழ் தேர்வு எழுதியவர்களுக்கு கிடைக்கும்.
Recommended Video
இது கிராமப்புற ஏழை மாணவர்களுக்கும், தமிழகத்துக்கும் செய்யப்பட்டு உள்ள அநீதி. தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கும் அளிக்கும் மசோதாவை மத்திய அரசு ஜனாதிபதிக்கு அனுப்பி விரைவில் சட்டமாக கொண்டு வரவேண்டும்.
தமிழகத்தில் எல்லா துறைகளிலும் ஊழல் இருக்கிறது என நடிகர் கமல்ஹாசன் கூறியது உண்மை. அவர் தவறாக சொல்கிறார் என்பதை ஏற்கமுடியாது." என்று தெரிவித்தார்.