முனுசாமி என்ன ஜெ.வே போட்டியிட்டாலும் அன்புமணியை அசைக்க முடியாது... இது பாமக ‘கெத்து’
சென்னை: வேப்பனப்பள்ளி தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியை பென்னாகரம் தொகுதிக்கு ஜெயலலிதா மாற்றியது, பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸை மனதில் வைத்து தான் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்தார் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா.
ஆனால், வேட்பாளர் பட்டியல் வெளியான மறுதினம் முதலே அதில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கிவிட்டன. இதுவரை ஐந்து முறை வேட்பாளர் பட்டியல் மாற்றப்பட்டு விட்டது. வேட்பாளர்கள் மீது கட்சித் தொண்டர்களின் புகார்கள் காரணமாகவே இந்த மாறுதல்கள் எனக் கூறப்படுகிறது.
ஆனால், மற்ற வேட்பாளர்களிடமிருந்து வேறுபட்டு வேப்பனப்பள்ளி தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியை, பென்னாகரத்திற்கு மாற்றியது பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணியை மனதில் வைத்து தான் என்கிறார்கள்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மற்ற கட்சிகளே மண்ணைக் கவ்விய நிலையில், தர்மபுரி தொகுதியில் அன்புமணி வெற்றி பெற்றார். இதனால், சுமார் ஒரு வருட காலம் அம்மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடத்தினார் அவர்.
அதோடு, அந்த வெற்றி தந்த தைரியமே தற்போது அவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்து, பாமக தனித்துப் போட்டியிட துணிந்ததற்கான காரணம் என அதிமுக தலைமை எண்ணுகிறதாம். எனவே, இந்தத் தேர்தலில் அவரை எப்படியும் தோற்கடித்துவிட வேண்டும் என மனக்கணக்கு போட்டு வருகிறதாம் அதிமுக.
இதனால் தான், அன்புமணியின் தர்மபுரி தொகுதியில் பாமகவில் பல பொறுப்புகளை வகித்து, பின்னர் அதிமுகவுக்கு வந்த பு.தா.இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால், தர்மபுரி அல்லது பென்னாகரத்தில் அன்புமணி போட்டியிடலாம் என்ற தகவல் இப்போது தான் உளவுத்துறை வாயிலாக கிடைத்ததாம். எனவே தான் கே.பி.முனுசாமி பென்னாகரத்திற்கு மாற்றம் செய்திருக்கிறார் என பாமக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த போதிலிருந்தே மாவட்டச் செயலாளராக இருந்தவர் கே.பி.முனுசாமி. தருமபுரி, கிருஷ்ணகிரி என இரண்டு மாவட்ட கடைக்கோடி கிராமத்திற்கும் பரிச்சயமான முகம். வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். அன்புமணி பென்னாகரத்தில் போட்டியிட்டால் அவருக்கான சரியான போட்டியாக கே.பி.முனுசாமி இருப்பார் என அதிமுக கருதுகிறதாம்.
ஆனால், இப்படி வேட்பாளர்களை மாற்றியெல்லாம் அன்புமணியின் வெற்றியைத் தடுத்துவிட முடியாது. முனுசாமி என்ன ஜெயலலிதாவே எதிர்த்து போட்டியிட்டாலும் கூட, அன்புமணியைத் தோற்கடிக்க முடியாது என பாமகவினர் கூறி வருகின்றனராம்.