நீதிபதி குன்ஹா, கன்னடர்களுக்கு எதிரான போஸ்டர்கள்: அதிமுகவினர் அகற்றம்!
திருச்சி: தமிழகத்தில் வாழும் கன்னடர்களுக்கு எதிராகவும் நீதிபதி குன்ஹாவை திட்டியும் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் அகற்றப்பட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவையும் நேற்று கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதற்கிடையே, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹாவுக்கு எதிராகவும், கர்நாடக மக்களை சிறைபிடிப்போம் என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களும் தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டிருந்தது.
இதையடுத்து, போஸ்டர் தொடர்பாக பெங்களூர் போலீஸ் கமிஷனர், சென்னை போலீஸ் கமிஷனரை தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் அகற்றப்பட்டுள்ளது.
மேலும், இனிமேல் இதுபோன்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டக்கூடாது எனவும், அதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.