அணுக்கழிவுகளின் குப்பை கூடமா தமிழகம்… எதிர்க்கும் திருமாவளவன்
அணுக்கழிவுகளின் குப்பை கூடமாக தமிழகம் மாறி வருகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை: இந்தியாவின் வேறு எந்த மாநிலத்தில் தொடங்கப்படாமல் தமிழகத்தில் மட்டும் அணு உலைகள் தொடங்கப்பட்டு அணுக் கழிவுகளை கொட்டும் குப்பை கூடமாக தமிழகம் மாறி வருவதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் திருமாவளவன் பேசியதாவது:
அணு உலைகளால் ஏற்படும் அபாயங்கள் அதிகம். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் அணு உலைகளை அமைக்காமல் தமிழ்நாட்டில் மட்டும் அமைப்பதற்கான காரணம் என்ன? வேறு மாநிலங்களில் அணு உலைகளை அமைக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலேயே தமிழ்நாட்டில் அமைக்கப்படுகின்றன. அணு உலைகளை அமைக்க கேரளா, ஆந்திர பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களும் அனுமதி மறுக்கப்பட்ட பின்னர்தான் தமிழ்நாட்டில் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டன.
இது ஒருபுறம் இருக்க, அணு உலைகளை விரிவு படுத்தும் திட்டத்தையும் மத்திய அரசு செய்து வருகிறது. ஏற்கனவே உள்ள அணு உலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை என்ன செய்யப் போகிறது என்பதற்கே பதில் இன்னும் தெரியவில்லை. இந்நிலையில் அணு உலை விரிவாக்கம் என்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது. அணு உலைகள் மூலம் உருவாகும் கழிவுகளை கொட்டும் குப்பை கூடமாக தமிழகம் மாறி வருகிறது.
எனவே, அணு உலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை மத்திய அரசு என்ன செய்யப் போகிறது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அணு உலை விரிவாக்கத்தை நிறுத்த வேண்டும். சூரிய ஒளியின் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய அரசு மெத்தனம் காட்டக் கூடாது.
இதனைக் கண்டிக்கும் வகையில், மனித உரிமை நாளான டிசம்பர் 10ம் தேதி, அணு உலைகளை எதிர்த்து அணு தீமை எதிர்ப்பு மாநாட்டை நடத்த உள்ளோம். இந்த மாநாட்டில் மனித நேய மக்கள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இரண்டு இடது சாரி கட்சிகள் மற்றும் தோழமை கட்சிகள் பங்கேற்கும் என்று திருமாவளவன் தெரிவித்தார்.