ஜெ. சிகிச்சை விவரங்களை கேட்கும் தமிழக அரசு- சசிகலா தரப்பு அதிர்ச்சி- மத்திய அரசு அதிரடி!
ஜெயலலிதாவுக்கு வழங்கிய சிகிச்சை குறித்த முழு விவரத்தையும் அப்பல்லோ மருத்துவமனை, வெளியிட வேண்டும் என தமிழக அரசு சார்பில் உத்தரவு போயுள்ளதாம். இந்த உத்தரவு பின்னணியில் மத்திய அரசு உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை விவரங்களை வெளியிட வேண்டும் என்று மத்திய அரசு, தமிழக அரசுக்கு நெருக்கடி தருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் சசிகலா தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளதாம்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில், 75 நாட்கள் கழித்து, டிசம்பர் 5ம் தேதி, இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கு நடுவேயான கால கட்டத்தில் ஜெயலலிதாவின் சிகிச்சை படம், வீடியோ, ஆடியோ என எதுவுமே வெளியிடப்படவில்லை. இரும்பு பெண் என வர்ணிக்கப்பட்ட ஜெயலலிதா, அதுவும் மாநில முதல்வராக இருந்தபோதே மர்மான முறையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டது வெகு ஜன மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலா மட்டுமே உடனிருந்தார்
ஜெயலலிதாவின் தோழியாக அறியப்படும் சசிகலா மட்டுமே அவருடன் மருத்துவமனையில் இருந்ததால், இதற்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பில் அவரே இருப்பதாக பல முனைகளில் இருந்தும் கோரிக்கை வெளியாகிக் கொண்டுள்ளது. ஆனால், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகமும் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையை முழுமையாக வெளியிடாமல் உள்ளது மக்களிடையே கோபத்தை அதிகரித்துள்ளது.
தீபா பேட்டி
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தேசிய ஊடகங்களுக்கு அளித்த பேட்டிகளில், அத்தை ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறிய கருத்து நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மாநில முதல்வருக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் எதற்காக ரகசியம் காக்கப்பட வேண்டும் என்ற கேள்வி நாடு முழுக்க எழுகிறது.
அப்பல்லோவிடம் அறிக்கை கேட்கிறது அரசு
இந்த நிலையில், அப்பல்லோ மருத்துவமனை, ஜெயலலிதாவுக்கு வழங்கிய சிகிச்சை குறித்த முழு விவரத்தையும் வெளியிட வேண்டும் என தமிழக அரசு சார்பில் உத்தரவு போயுள்ளதாம். இந்த உத்தரவு பின்னணியில் மத்திய அரசு உள்ளதாக கூறப்படுகிறது. பன்னீர்செல்வம் தலைமையிலான மாநில அரசுக்கு மத்திய அரசிடமிருந்து வந்த கட்டளை அடிப்படையில்தான், சிகிச்சை குறித்த விவரத்தை வெளியிட அப்பல்லோவிடம் மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளதாம்.
சசிகலா தரப்பு அதிர்ச்சி
மோடி மற்றும் பன்னீர்செல்வம் அரசுகளின் இந்த அதிரடி நடவடிக்கைகளால் அதிர்ச்சியடைந்துள்ளது சசிகலா தரப்பு என்கிறார்கள். சிகிச்சையை ரகசியமாகவே வைத்திருக்க சசிகலா தரப்பு விரும்புகிறதாம். அது எதனால் என்ற காரணம் தெரியவில்லை என்றபோதிலும், சிகிச்சை பற்றிய விவரம் வெளியே தெரியக் கூடாது என்பதில் குறிக்கோளாக உள்ளனராம். எனவே ஜெயலலிதா உடல் நிலை குறித்த அறிக்கை வெளியிடாமல் தடுக்கவும் முயற்சிகள் நடக்கின்றனவாம். இதற்காக பிடிக்க வேண்டியவர்களை பிடித்து கோரிக்கைவிடுக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.