திமுக எம்எல்ஏக்கள் மீதான உரிமைக்குழு நோட்டீஸ் வழக்கு.. 27ம் தேதிக்கு ஒத்திவைத்த ஹைகோர்ட்!
திமுக எம்எல்ஏக்கள் மீதான உரிமைக் குழு நோட்டீஸ் வழக்கு மீதான விசாரணை வரும் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
சென்னை: உரிமைக் குழு நோட்டீஸ் வழக்கு மீதான திமுக எம்எல்ஏக்கள் தொடுத்த வழக்கின் விசாரணை வரும் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருள் விற்பனை செய்யப்படுகிறது என்பதை ஆதாரத்தோடு காட்டுவதற்காக திமுக உறுப்பினர்கள் மானிய கோரிக்கையின் போது சட்டசபைக்கு அந்த பொட்டலங்களை கொண்டு சென்றனர்.
தடை செய்யப்பட்ட பொருளை பேரவைக்குள் கொண்டுவரக்கூடாது என்ற விதிமுறையை காரணம் காட்டி, ஸ்டாலின் உட்பட 21 திமுக எம்எல்ஏக்கள் மீது உரிமை மீறல் பிரச்சினை கொண்டுவந்து, அதுகுறித்து பரிசீலிக்க சட்டசபையின் உரிமை மீறல் குழுவிற்கு சபாநாயகர் தனபால் அனுப்பி வைத்தார்.
அதன்படி உரிமை குழு கூட்டம் கூடியது. அதில் திமுக எம்எல்ஏக்கள் 21 பேருக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில் திமுக செயல்தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் உரிமைக்குழுவிடம் விளக்கம் அளிக்க 15 நாள் அவகாசம் கோரினார்.
அத்துடன் சட்டப்பேரவை உரிமைக் குழு அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து மு.க. ஸ்டாலின் ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 7-ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக எம்எல்ஏக்களுக்கு அனுப்பப்பட்ட உரிமை குழு நோட்டீஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க சபாநாயகர் தனபாலுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சபாநாயகர், பேரவை செயலாளர், உரிமைக் குழு தலைவர் உள்ளிட்டோர் விளக்கம் அளிக்க கால அவகாசம் கோரியதை அடுத்து இந்த வழக்கு வரும் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.