அம்மாடியோவ்... ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் புள்ளிவிவரத்தைப் பாருங்களேன்!
சென்னை: 12,000 சேலைகள், 28 கிலோ தங்கம், ஜோடி ஜோடியான செருப்புகள், ஏகப்பட்ட நிலபுலன்கள், சொத்துக்கள், நிறுவனங்கள்.. இவற்றுக்கு மத்தியில் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு பல ஆண்டுகளாக சுற்றிச் சுற்றி வந்து கொண்டுள்ளது.. நாளை கிளைமேக்ஸ்!
ஜெயலலிதா மீதான இந்த வழக்கின் மையப் புள்ளி என்ன என்று பார்த்தால், ரூ. 66 கோடி அளவுக்கு வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்துக்களைச் சேர்த்து விட்டார் ஜெயலலிதா என்பதுதான்.
1991ம் ஆண்டு முதல் முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்த ஜெயலலிதா தனது முதல் பதவிக்காலத்தின்போது சேர்த்து சொத்துக்கள் இவை என்பது குற்றச்சாட்டாகும். அடுத்து 1996ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக ஆட்சிக்காலத்தில், ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி தொடர்ந்த இந்த வழக்கை திமுக அரசு தானும் இணைத்துக் கொண்டு நடத்த ஆரம்பித்தது.
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு இத்தனை கால விசாரணைக்குப் பின்னர் நாளை ஒரு முடிவுக்கு வருகிறது. அதன் பிறகு அப்பீல்கள் காத்திருக்கின்றன.. அது அடுத்த கதை... இதுவரை நடந்த கதையின் சாராம்சத்தை ஒரு புள்ளிவிவரமாக பார்ப்போம்.
66
ரூ. 66 கோடி அளவுக்கு வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்துக்களைக் குவித்து விட்டார் ஜெயலலிதா என்பது வழக்கு. இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, தினகரன், சுதாகரன், அனுராதா ஆகியோரும் இணைக் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
3
1991ம் ஆண்டு முதல்வர் பதவியில் ஜெயலலிதா அமர்ந்தபோது அவரது சொத்து மதிப்பு ரூ. 3 கோடியாக மட்டுமே இருந்தது என்பது அரசுத் தரப்புக் குற்றச்சாட்டு.
1
முதல்வர் பதவியில் இருந்த ஐந்து ஆண்டுகாலமும் முதல்வர் ஜெயலலிதா மாதம் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாக பெற்றார்.
32
முதல்வர் ஜெயலலிதாவின் பதவிக்காலத்தின்போது ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன், சசிகலா, சசிகலாவின் அண்ணி இளவரசி ஆகியோர் 32 நிறுவனங்களை தொடங்கியுள்ளனர் என்பது அரசுத் தரப்பின் இன்னொரு குற்றச்சாட்டு. இவற்றின் மூலம் பல சொத்துக்கள் வாங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு கூறுகிறது.
1000
ஜெயலலிதாவின் சொத்துக்களில் ஒன்றாக கூறப்படுவது நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ள 1000 ஏக்கர் பரப்பளவிலான எஸ்டேட்.
இன்னொரு 1000
இதேபோல நெல்லையில் 1000 ஏக்கர் நிலமும் வாங்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
28
ஜெயலலிதா உள்ளிட்டோரிடமிருந்து 28 கிலோ தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
12,000
இதுதவிர ஜெயலலிதா உள்ளிட்டோரிடமிருந்து 12,000 சேலைகளும் பறிமுதல் செய்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை பட்டுச் சேலைகளாகும்.
5
1996ம் ஆண்டு சுதாகரனின் திருமமத்திற்கான செலவுத் தொகை ரூ. 5 கோடி என்று அரசுத் தரப்பு கூறியுள்ளது.
18
கடந்த 18 வருடமாக இந்த சொத்துக் குவிப்பு வழக்கு நடந்து வருகிறது.
13
ஜெயலலிதா மீது கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட வழக்குகளில் 13 வழக்குகளில் அவர் விடுதலை செய்யப்பட்டு விட்டார் என்பதைச் சுட்டிக் காட்டும் அதிமுகவினர் இந்த வழக்கிலும் அம்மா வெல்வார் என்ற நம்பிக்கையுடன் பிரார்த்தனைகள், வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
2001
கடந்த 2001ம் ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்த சொத்துக் குவிப்பு வழக்கு சென்னையிலிருந்து பெங்களூருக்கு மாற்றப்பட்டது.
2016
இந்த வழக்கின் தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு முக்கியமானது. காரணம் இதில் அவர் தோற்றால், தண்டனை பெற்றால், பதவி விலக வேண்டியிருக்கும். அப்படி நேர்ந்தால் 2016 சட்டசபைத் தேர்தலில் அவர் பெரும் பின்னடைவை சந்திக்க வேண்டி வரும். மாறாக வெற்றி பெற்றால், 2016 தேர்தலில் மகத்தான வெற்றியை அவர் குவிக்க வாய்ப்பு கிடைக்கும். திமுகவின் பழிவாங்கும் நடவடிக்கையே இந்த வழக்கு என்பதையும் அவர் மக்களிடம் தைரியமாகச் சொல்ல முடியும்.