நள்ளிரவில் ஏடிஎம் மெஷினை உடைத்து கொள்ளை முயற்சி - மாட்டியவருக்கு ”தர்ம அடி”!
தாம்பரம்: சென்னையில் பல்லாவரம் அருகே நள்ளிரவில் ஏடிஎம் மெஷினை உடைத்து துணிகர கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வாலிபரை சுற்றிவளைத்து பொதுமக்கள் தர்மஅடி கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர், பாலாஜி நகர், 14 ஆவது தெருவில் எஸ்பிஐ வங்கியின் ஏ.டி.எம் மையம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் 2 வாலிபர்கள் இந்த ஏ.டி.எம் மையத்துக்கு வந்தனர். ஒருவர் வெளியே நின்றார். மற்றொருவர் ஏ.டி.எம் மையத்துக்குள் சென்று திடீரென ஏ.டி.எம் மெஷினை சுத்தியலால் உடைக்க தொடங்கினார். சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வெளியே திரண்டனர்.
அப்போது பொதுமக்களை கண்டதும் வெளியே நின்றிருந்த வாலிபர் தப்பியோடினார். உடனே மெஷினை உடைத்து கொண்டிருந்த வாலிபரை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து, தர்மஅடி கொடுத்து சங்கர் நகர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
அவர்களில் பிடிபட்ட செஞ்சியை சேர்ந்த சரத்குமார் சங்கர் நகர் 14 ஆவது தெருவில் தங்கி, மடிப்பாக்கத்தில் உள்ள தனியார் கம்பெனியில் டிடிபி ஆபரேட்டராக வேலை பார்க்கிறார். தப்பியோடியவர் ஜான்போஸ். திருநீர்மலை ரோட்டில் தங்கியிருந்து பம்மலில் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார் என்பதும் தெரிந்தது.
சரத்குமார், ஜான்போஸ் ஆகியோருக்கு பம்மல் மூவேந்தர் தெருவை சேர்ந்த பாலா, அனகாபுத்தூரை சேர்ந்த வினோத் ஆகிய நண்பர்கள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் 4 பேரும் சந்தித்து பேசினர். போதிய வருமானம் இல்லாமல் இருக்கிறது. குறுகிய காலத்தில் பணக்காரராகி, உல்லாசமாக இருக்க வேண்டும் என முடிவெடுத்தனர்.
அதன்படி, நேற்று முன்தினம், ஏ.டிஎம் மெஷினை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க சரத்குமார் முயற்சி செய்தார். அவருக்கு ஜான்போஸ் உதவி செய்தார் என தெரிந்தது.இதை தொடர்ந்து, சரத்குமாரின் நண்பர்கள், பாலா மற்றும் வினோத் ஆகியோரை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்து வருகின்றனர். தப்பியோடிய ஜான்போஸை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications