விருதுநகரில் என்னை தோற்கடிக்க ராஜபக்சே- ஸ்டாலின் சதி: வைகோ பரபர புகார்
சென்னை: தேர்தலில் தன்னை தோற்கடிக்க ராஜபக்சேயும், ஸ்டாலினும் சதி செய்வதாக மதிமுக வைகோ செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர்,
"நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தனியாகவே 272 தொகுதிகளை கைப்பற்றும். பா.ஜனதா கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு 7 தொகுதிகள் தருவதாக உறுதி அளித்துள்ளனர்.
விருதுநகர், ஈரோடு, காஞ்சிபுரம், தேனி, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி ஆகிய தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு விட்டன. தென்காசி தொகுதியை பெறுவதில் மட்டும் சிக்கல் இருக்கிறது.
தோற்கடிக்க சதி
விருதுநகர் தொகுதியில் என்னை தோற்கடிக்க வேண்டும் என்று பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மூலம் இலங்கை அதிபர் ராஜபக்சே சதி செய்கிறார்.
மு.க.ஸ்டாலினும் கே.கே.எஸ்.எஸ்.ஆரும்
மு.க.ஸ்டாலினும் என்னை தோற்கடிக்க திட்டம் வகுத்துள்ளதாக செயல் வீரர்கள் கூட்டத்தில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். பேசியுள்ளார். இந்த சதிகளை தகர்ப்போம்.
செலவுக்கு பணம்
இன்றைய சூழலில் பணம் இல்லாமல் தேர்தலை சந்திக்கும் கட்சி நாம் தான். தேர்தல் நிதியாக 11 கோடி ரூபாய் தான் உள்ளது. அதில் ஒவ்வொரு தொகுதிக்கும் 60 லட்சம் ரூபாய் தந்து விடுகிறேன்.
பொறுப்பாளர் கணக்கில் பணம்
தொகுதிக்கு ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டு, அவரது கணக்கில் பணம் செலுத்தப்படும். அதை கொண்டு தேர்தல் பணியாற்றுங்கள். மீதமுள்ள செலவுகளை, வேட்பாளர் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.
உழைப்பவர்களுக்கு சீட்
மற்ற கட்சிகள் எல்லாம், சீட் கொடுப்பதற்கே, எவ்வளவு பணம் தருவீர்கள் எனக் கேட்டுள்ளனர். நான் உழைப்பவர்களுக்கு மட்டுமே சீட் கொடுப்பேன். இந்த தேர்தலில் மட்டுமல்ல; சட்டசபை தேர்தலிலும் இதையே பின்பற்றுவேன்.
மக்கள் பலம்
மதுரை விமான நிலையத்தில் மு.க.அழகிரியை சந்தித்தேன். அது மிகவும் நெகிழ்ச்சியான சந்திப்பு. தேர்தலுக்கு செலவு செய்ய போதுமான பலம் ம.தி.மு.க. வேட்பாளர்களிடம் இல்லை. என்றாலும் மக்கள் பலம் இருக்கிறது" என்றார்.