போலீஸ் ரெய்டுக்கு கடும் எதிர்ப்பு.. சென்னையில் ஆட்டோ டிரைவர்கள் மறியல்!
சென்னை: சென்னையில் ஓடும் ஆட்டோக்களில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க போலீஸாரும், ஆர்டிஓ அலுவலகத்தினரும் எடுத்து வரும் சோதனை நடவடிக்கைக்கு ஆட்டோ டிரைவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை எழும்பூரில் இன்று ஆட்டோ டிரைவர்கள் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை நகரில் ஆட்டோக்களில் மீட்டர் போட்டுத்தான் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான ஆட்டோ டிரைவர்கள் மீட்டர் போட்டு பயணிகளை ஏற்ற மறுக்கிறார்கள். போக வேண்டிய இடத்துக்கு பேரம் பேசி அதிக கட்டணம் கேட்கிறார்கள்.
மீட்டர் போட்டு ஓட்டும் ஆட்டோ டிரைவர்கள் மீட்டருக்கு மேல் ரூ.10, ரூ.20 என்று கேட்கிறார்கள். இதுபற்றி போக்குவரத்து போலீசாருக்கும், வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கும் ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து போக்குவரத்து போலீசாரும், அதிகாரிகளும் ஆட்டோ டிரைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். என்றாலும் அவர்கள் மீட்டர் போடாமலும், கூடுதல் கட்டணம் வசூலித்தும் ஆட்டோ ஓட்டியதால் நேற்று அதிகாரிகள் ஆட்டோக்களை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது முறைகேடாக இயக்கிய ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இன்று 2-வது நாளாக போக்குவரத்து போலீசாரும், வட்டார போக்குவரத்து அதிகாரிகளும் சென்னையில் பல இடங்களில் ஆட்டோக்களில் நிறுத்தி சோதனை நடத்தினார்கள்.
நேற்று எழும்பூரில் சந்தான கிருஷ்ணன் என்ற ஆட்டோ டிரைவர் 4 பயணிகளை மீட்டர் போடாமல் ஏற்றி வந்தார். அவரது ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. இதை கண்டித்து இன்று எழும்பூரில் வீரன் அழகு முத்துகோன் சிலை அருகில் 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். சாலை மறியலிலும் குதித்தனர்.

தகவல் கிடைத்ததும் மயிலாப்பூர் துணை கமிஷனர் கிரி, உதவி கமிஷனர்கள் பீர்முகமது, கலிதீர்த்தான், இன்ஸ்பெக்டர்கள் மதியரசு, கண்ணன், இளங்கோ ஆகியோர் போலீசாருடன் விரைந்து வந்தனர். ஆட்டோ டிரைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆட்டோ டிரைவர்களுக்கு ஆதரவாக சி.ஐ.டி.யு. வடசென்னை மாவட்ட செயலாளர் மனோகரன் வந்தார்.
அப்போது ஆட்டோ டிரைவர்கள் கூறுகையில், சென்னையில் ஷேர் ஆட்டோக்களையும், மினி வேன்களில் பயணிகளை ஏற்றிச்செல்வதையும் கட்டுப்படுத்தினால் நாங்கள் மீட்டர் போட்டு ஆட்டோ ஓட்டத்தயார் என்றனர்.
இந்தப் போராட்டம் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications