அப்படி எல்லாம் பேசாதீங்க ப்ளீஸ் ... நாங்க பாவம் : ட்விட்டரில் வைகோவை கலாய்த்த மு.க.அழகிரி மகன்
வைகோவை ட்விட்டரில் கலாய்த்த அழகிரி மகன் தயாநிதி... மதிமுக தொண்டர்கள் அதிருப்தி
சென்னை : திமுகவிற்கு எப்போதும் மதிமுக துணையாக இருக்கும் என்று சொல்லிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை , மு.க.அழகிரி மகன் தயாநிதி ட்விட்டரில் கிண்டல் செய்து பதிவிட்டு உள்ளார். இது மதிமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று சந்தித்து நலம் விசாரித்தார். இது வழக்கமான சந்திப்பு தான் என்று இரு கட்சிகளின் சார்பிலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த தேர்தல்களில் திமுகவை கடுமையாக எதிர்த்த வைகோ, சமீபகாலமாக திமுக மீதான தன் பாசத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்த வைகோ, அதற்கடுத்து முரசொலி பவளவிழா மாநாட்டில் கலந்துகொண்டார்.
இதனையடுத்து ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் திமுகவிற்கு மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவளித்தன. ஆர்.கே நகர் பிரச்சாரக்கூட்டத்தில் பேசிய வைகோ தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் விரைவில் பதவி ஏற்பார் என்று பேசினார்.
ஆனால், மிகப்பெரிய கூட்டணி வைத்தும் இடைத்தேர்தலில் திமுக தோல்வியை தழுவியது. இருப்பினும் இந்த கூட்டணி இனி எப்போதும் உடையாது என்றும், திராவிட இயக்க கொள்கைகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துகளை முறியடிக்க இனி எப்போதும் திமுக பக்கம் இருப்பது என்று மதிமுக முடிவு செய்துள்ளது என்று வைகோ அறிவித்தார்.
இந்நிலையில் நேற்று கோபாலபுரம் வீட்டில் கருணாநிதியை சந்தித்து பேசிய வைகோ, திமுகவிற்கு பக்கபலமாக மதிமுக துணை நிற்கும் என்று செய்தியாளர்களிடத்தில் தெரிவித்தார். இதை ட்விட்டரில் குறிப்பிட்ட அழகிரி மகன் தயாநிதி அழகிரி, அப்படி எல்லாம் பேசாதீங்க.. ப்ளீஸ்... நாங்க பாவம் என்று குறிப்பிட்டு உள்ளார்.
இதனால் மதிமுக தொண்டர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். சமீபத்தில் ஸ்டாலின் இருக்கும் வரை திமுகவால் வெற்றி பெற முடியாது என்று அழகிரி குறிப்பிட்டு இருந்ததும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.












Click it and Unblock the Notifications