எடப்பாடியின் அடுத்தடுத்த அதிரடிகளால் ஆடிப்போயுள்ள தினகரன் தரப்பு! இன்னும் இருக்கிறதாம் திருப்பங்கள்
Recommended Video
சென்னை: எடப்பாடி பழனிச்சாமி தரப்பின் அடுத்தடுத்த அதிரடிகளால் ஆடிப்போயுள்ளது டிடிவி தினகரன் தரப்பு. "ஆயிரம் தினகரன்கள் வந்தாலும் அசைக்க முடியாது" என முதல்வர் அதிமுக பொதுக்குழு மேடையில் முஷ்டி முறுக்கிய நிலையில் இன்னும் பல அதிரடிகள் காத்திருப்பதாக கண் சிமிட்டுகிறார்கள் எடப்பாடி வட்டாரத்தில்.
பிரிந்து கிடக்கும் எதிர்க்கட்சிகள், கருணாநிதி போன்ற ஒரு ஆளுமையின் வயோதிகம், மத்திய அரசின் பரிபூரண ஆசிர்வாதம்.. போன்ற தங்களுக்கு ஏற்ற இத்தனை வாய்ப்புகளையும் கோட்டைவிட்டுவிட்டு ஆட்சியை இழக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒன்றும், அரசியல் அரிச்சுவடி அறியாதவர் இல்லை.
சாதாரண தொண்டனாக கட்சிக்குள் அடியெடுத்து வைத்து, ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய வட்டத்திற்குள் வந்து, பவர்புல் அமைச்சராகி, பிறகு சசிகலா நம்பிக்கையையும் பெற்று முதல்வருமான எடப்பாடியை, அப்படி எளிதில் யாரும் நினைத்துவிட முடியாது.
அமைதி சாதனை
பன்னீர்செல்வம் போல வெளிப்படையாக எந்த சவாலையும் தெரிவிக்காமல், உள்ளேயே இருந்து தனது கரங்களை வலுப்படுத்தி முதல்வர் நாற்காலியில் இருக்கமாக அமர்ந்துள்ள எடப்பாடியை, அவ்வளவு எளிதில் தினகரன் அசைத்துவிட முடியாது என்கிறது கள நிலவரம். வாராது வந்த மாமணியாய் கையில் கிடைத்துள்ள இந்த ஆட்சியை தக்க வைக்க எடப்பாடி எந்த எல்லைக்கும் செல்ல கூடும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
ஒரே அடியில் காலி
பதவி என்று ஒன்று இருப்பதால்தானே, கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்த முடிகிறது என்று கருதிதான், பொதுக்குழுவை கூட்டி தினகரன், சசிகலா என எதிர்முகாம்களின் பதவிகள் அத்தனையையும் காலி செய்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. முன்னதாக தினகரன் தரப்பு எதிர்ப்புக்கு நடுவே பன்னீர்செல்வம் அணியை ஆட்சியில் இணைத்துவிட்டார்.
முதல்வர் வார்னிங்
பொதுக்குழுவில் பேசிய முதல்வர், "ஆயிரம் தினகரன்கள் வந்தாலும், கட்சியையும், ஆட்சியையும் அசைக்க முடியாது" என்ற தொனியில் பேசி நிர்வாகிகள் கரகோசத்தை வாங்கியுள்ளார். ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவேன் என்று தினகரன் நேற்று இரவு அவசரமாக ஒரு எச்சரிக்கையை விடுத்த நிலையில், முதல்வரின் பதிலடி முக்கியத்துவம் பெற்றது.
எல்லாம் பக்கா
இந்த நிலையில்தான், திடீரென குடகு மாவட்டத்தில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ள ரிசார்ட்டுக்கு தமிழக போலீசார் விரைந்துள்ளனர். கட்சி எங்கள் பக்கம், வருவோர் இப்போவே வரலாம் என்ற சமிக்ஞைதான் எம்எல்ஏக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இப்படி அனைத்து வகைகளிலும் தினகரனுக்கு செக் வைத்தபடி உள்ளார் முதல்வர். இதில் கவனிக்க வேண்டியது, தினகரனே நினைத்தாலும் ஆட்சியை கவிழ்க்கவிடாதபடி அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாம். அது என்ன என்று கேட்டால், பொறுத்திருந்து பாருங்கள் என்று கண் சிமிட்டுகிறார்கள் எடப்பாடி தரப்பில்.