நாத்தக்குடியாக மாறிய தூத்துக்குடி... புறநகரில் திடீர் துர்நாற்றம்..பொதுமக்கள் பீதி
தூத்துக்குடி: மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட சின்னகண்ணுபுரம்,சில்வர்புரம்,வி எம் எஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை ரசாயண கலவை போன்ற துர்நாற்றம் இப்பகுதியில் பரவியதால் பொதுமக்கள் தங்களது வீட்டின் உட்புறம் கதவை அடைத்து கொண்டு இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கடந்த வருடம் மார்ச் மாதத்தில் ஏற்பட்டதை போன்று தற்போது ஏற்பட்டுள்ளதா? என்று பொதுமக்கள் அச்சம் கொண்டனர். இதனையடுத்து இப்பகுதி பொதுமக்கள் தூத்துக்குடி சிப்காட் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து தூத்துக்குடி வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். தூத்துக்குடி சின்னகண்ணுபுரத்தில் சுரேஷ் குமார் என்பவருக்கு சொந்தமான சாக்கு கிட்டங்கியை தூத்துக்குடியை சேர்ந்த சந்திரசேகர் என்பவருக்கு வாடகைக்கு விட்டிருந்தார்.
இவர் தூத்துக்குடியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வேதிபொருட்கள் விநியோகம் செய்யும் கிட்டங்கியை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சிலமாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தீவிபத்தில் ஏற்பட்ட கழிவுகளை அகற்றும் பணியில் ஜேசிபி இயந்திரம் ஈடுப்பட்டிருந்தபோது கிட்டங்கியில் வைக்கப்பட்டிருந்த சல்ப்யூரிக் ஆசிட் பாட்டிகள் உடைந்ததால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனையடுத்து உடைந்த பாட்டில்கள் அப்புறப்படுத்தப்பட்டது.இது குறித்து தூத்துக்குடி சிப்காட் காவல்துறையினர் வாக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து தூத்துக்குடி முதுநிலை ரசாயண அதிகாரி ராமமூர்த்தியிடம் கேட்டபோது தூத்துக்குடி சின்னகண்ணுபுரத்தில் கழிவுகளை அகற்றும்போது சல்பியூரிக் அமில பாட்டில்களில் இருந்து அமிலவாயு கசிந்துள்ளதுஇது வீரியம் குறைந்ததுதான் இருந்தாலும் அதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார்.