வருகிறது விநாயகர் சதுர்த்தி.. இந்த வருஷ ஸ்பெஷல் "பாகுபலி" பிள்ளையார்!
சென்னை: விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு சென்னை காதி கிராமோத்யோக் பவனில் பார்வையாளர்களைக் கவரும் வகையில் பல்வேறு விதமான கொலு பொம்மைகள் விற்பனைக்கு குவிந்துள்ளன.
விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்டம்பர் 5ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. நவராத்திரி விழா வரும் செப்டம்பர் 30ம் தேதி தொடங்கி, அக்டோபர் 1 0ம் தேதி வரையில் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, சென்னை அண்ணா சாலையில் உள்ள காதி கிராமோத்யோக் பவன், கொலு பொம்மைகள் விற்பனைக் கண்காட்சியை தொடங்கியுள்ளது. அக்டோபர் 11ம் தேதி வரையில் இந்தக் கண்காட்சி நடைபெறவுள்ளது.
இதில், பார்வையாளர்களைக் கவரும் வகையில் கைவினைஞர்களால் வடிவமைக்கப்பட்ட பல்வேறு வகையான கொலு பொம்மைகள் விற்பனைக்கு குவிந்துள்ளன. இந்த ஆண்டு புதுமையாக முருகனின் அறுபடை வீடுகள், பாகுபலி விநாயகர், கிரிக்கெட் விநாயகர், ராதை அலங்காரம் செட், காய்கறி அம்மன், கிருஷ்ணரின் விஸ்வரூப தரிசனம், மீனாட்சி முத்தங்கி சேவை, ராமர் பட்டாபிஷேகம், அஷ்டலட்சுமி பொம்மைகள் உள்ளிட்ட பல்வேறு விதமான பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன
சிலை தயாரிப்பு மும்முரம்
விநாயகர் சதுர்த்தியையொட்டி, விழுப்புரம் அருகே ஒரு கிராமம் முழுவதுமே விநாயகர் சிலை தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. நிகழாண்டு புதிய வரவாக "பாகுபலி' விநாயகர் சிலைகள் அதிகளவில் தயாரிக்கப்படுகின்றன. விழுப்புரம் அடுத்துள்ள அய்யங்கோயில்பட்டு கிராமத்தில் மண்பாண்டத் தொழிலாளர்கள் விநாயகர் சிலை தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கண்ணைக்கவரும் கணபதிகள்
தற்போது 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்தாண்டும் விநாயகர் சிலைகள் தயாரித்து, கர்நாடகம், ஆந்திரம் போன்ற வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வருகின்றனர். மரவள்ளி மாவு, காகிதக் கூழ், காகித அட்டைகள் கொண்ட கலவை மூலம் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகிறது. ராஜகணபதி, கற்பக விநாயகர், நந்தி மீது செல்லும் விநாயகர், பசு மீதான விநாயகர், எலி வாகன விநாயகர், சிங்க வாகன விநாயகர், புலி வாகன விநாயகர், மயில் வாகன விநாயகர் என்று விதவிதமாக சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
'பாகுபலி' விநாயகர்
இந்தாண்டு புதிய வரவாக, பிரம்மாண்ட ஆஞ்சநேயர் தனது கையில் விநாயகரை சுமந்து நிற்கும் சிலைகளும், அண்மையில் வெளியான பாகுபலி திரைப்பட காட்சி போல், சிவலிங்கத்தை சுமந்து நிற்கும் விநாயகரும் காட்சி தருகிறது. மேலும், உழவு செய்யும் விநாயகர், டிராக்டர், மோட்டார் சைக்கிள் ஓட்டும் விநாயகர் என்று கண்கவரும் உருவங்களில் விநாயகர் சிலைகளை புதிதாக வடிவமைத்துள்ளனர்.
ரசாயன வண்ணங்கள்
கர்நாடகத்தில் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மாவால் தயாரிக்கப்பட்ட சிலைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், இங்கு தயாரிக்கப்படும் தரமான மாவு கொண்ட சிலைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்த கிராமத்தில் தயாரிக்கும் சிலைகள் தண்ணீரில் போட்டவுடன் கரைந்துவிடும். அதனால் பாதிப்பில்லையாம். அதோடு ரசாயன வண்ணங்களையும் பயன்படுத்துவதில்லையாம்.
தயாராகும் சிலைகள்
புதுக்கோட்டை மாவட்டம் மழையூர், அறந்தாங்கி, பொன்னமராவதி ஆகிய பகுதிகளில் வினாயகர் சதுர்த்தி விழாவிற்காக விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி மும்முரம் நடைபெற்று வருகின்றன. விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு விற்பனைக்காக களிமண்ணால் வினாயகர் சிலை 3அடி முதல் 8அடி வரை தயாரிக்கப்படுகின்றன. இதில் 3அடி சிலை ரூ.2000 வரையும், 8அடி சிலை 9000 வரை விற்கப்படுகின்றன.
களிமண் விநாயகர் சிலைகள்
இந்த விநாயகர் சிலைகள் முற்றிலும் களிமண்ணால் சுற்றுசூழல் பாதிக்காத வகையில் தயாரிக்கபடுவதால் இதனை பக்தர்கள் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்கின்றனர். களிமண்ணால் தயாரிக்கும் விநாயகர் சிலைகளுக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.