கேரள சம்பவம் எதிரொலி... தமிழக தேர்தல் பிரச்சாரத்தில் பட்டாசு வெடிக்க தடை வருமா?
சென்னை: கேரளாவில் கோயில் திருவிழாவின்போது பட்டாசு வெடித்து தீவிபத்து ஏற்பட்டு நூற்றுக்கும் அதிகமானோர் பலியானதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக தேர்தல் பிரச்சாரத்தில் பட்டாசு வெடிக்க தடைவிதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் மே 16ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. கூட்டணிகள் உறுதியாகிவிட்ட நிலையில், வேட்பாளர் அறிவிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதிமுக சார்பில் போட்டியிடும் 227 வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்த முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த 9ம் தேதி சென்னை தீவுத்திடலில் பிரச்சாரத்தை தொடங்கினார்.
இதேபோன்று மற்ற கட்சி தலைவர்களும் வேட்பாளர்களை அறிவித்து, பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர்.
கேரள கோவில் தீ விபத்து...
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பரவூர் புட்டிங்கல் கோயிலில் வாணவேடிக்கை திருவிழாவின் போது எதிர்பாராதவிதமாக பட்டாசு வெடித்து ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
தடை கோரிக்கை...
பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்திய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக தேர்தல் பிரச்சாரத்தின் போது பட்டாசு வெடிக்க தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
வரவேற்பு...
தேர்தல் பிரச்சாரங்களின் போது, தலைவர்களையும், வேட்பாளர்களையும் வரவேற்க, கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடிப்பது வழக்கம். ஆனால், கேரள சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
மக்களின் பாதுகாப்பு...
எனவே, மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, விபத்து ஏற்படாமல் தவிர்ப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பட்டாசு வெடிக்க தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
போக்குவரத்து நெரிசல்...
அதோடு, பிரச்சாரத்தின் போது பெரும்பாலும் தலைவர்கள் வாகனம் வரும் சாலைகளில் தான் பட்டாசுகள் வெடிக்கப்படுவது வழக்கம். இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட வாய்ப்புள்ளது. சாலையோரத்தில் நடந்து செல்லும் பாதசாரிகளும் பாதிக்கப்படுவர் என்பது அவர்களது வாதமாக உள்ளது.