சீன பட்டாசு இறக்குமதியை தடை செய்ய வேண்டும்: சரத்குமார் கோரிக்கை
சென்னை: தமிழகத்தில் பட்டாசு தொழில் பாதிப்படையச் செய்துள்ள சீன பட்டாசுகள் இறக்குமதியை தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
இந்தியாவில் அதிகளவில் பட்டாசு தொழில் நடைபெறும் மாநிலம் தமிழகம். அதிலும் குறிப்பாக சிவகாசி, கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் அதிகளவு பட்டாசு தொழில் நடைபெற்று வருகிறது. ஆனால் தற்போது குறுக்கு வழியில் இந்தியாவிற்குள் கொண்டுவரப்படும் சீன பட்டாசுகளால் சிவகாசியில் ஏற்கனவே பட்டாசு தொழில் பாதிப்படைந்துள்ளது.
ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படும் பட்டாசு தயாரிப்பு உரிம கட்டணத்தை ரூ.15,000-லிருந்து ரூ.4 லட்சமாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது, பட்டாசு தொழிலுக்கே பெரும் ஆபத்தை உண்டாக்கி உள்ளது.
இது நீடித்தால் பட்டாசு தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள 5 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். மேலும் இத்தொழிலை நம்பி பல ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்துள்ள சிறிய, பெரிய தொழில் அதிபர்களும் மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
தடை செய்ய வேண்டும்
பட்டாசு தயாரிப்பில் பொட்டாசியம் குளோரைடு பயன்படுத்துவதற்கு இந்தியாவில் ஏற்கனவே தடை உள்ளது. ஆனால் சீன பட்டாசு அதிக அளவில் பொட்டாசியம் குளோரைடை தான் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இதன்மூலம் ஆபத்துகள் ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம்.
எனவே சீன பட்டாசுகளால் ஏற்படும் ஆபத்தை உணர்ந்து சீன பட்டாசுகள் இறக்குமதி ஆவதை மத்திய அரசு அனைத்து வழிகளிலும் தடுத்து நிறுத்த வேண்டும் மற்றும் உயர்த்தப்பட்டுள்ள ஆண்டு உரிம கட்டணங்களையும், புதிய கெடுபிடிகளையும் மத்திய அரசு உடனே திரும்பப்பெற வேண்டும் என அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications