ஊட்டி தாவரவியல் பூங்காவில் காட்டெருமைகள் உலா,, போலீசார் உட்பட சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம்
தாவரவியல் பூங்காவில் காட்டெருமைகளை கண்டு சுற்றுலாபயணிகள் ஓட்டம் பிடித்தனர்.
ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் காட்டெருமைகள் நடமாட்டத்தினை கண்ட போலீசார் உட்பட சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
ஊட்டியின் அழகை ரசிக்கவும், சீதோஷ்ண காலநிலையை அனுபவிக்கவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். ஊட்டியை சுற்றி வனப்பகுதிகள் அதிகமாக காணப்படுவதால், காட்டெருமை, சிறுத்தைப்புலி, புலி, கடமான், புள்ளிமான், காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.
சமீபகாலமாக வனப்பகுதியையொட்டி அனுமதி இல்லாமல் தங்கும் விடுதிகள் கட்டுவதாலும், மின்வேலி அமைப்பதாலும், சீசன் காலங்களில் தங்கும் விடுதிகளில் இரவு நேரத்தில் ஒலிபெருக்கி மூலம் அதிக ஒலியுடன் கூடிய இசை எழுப்புவதாலும் வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊட்டி நகரையொட்டிய கிராமங்களுக்கு வருகின்றன.
அப்போது கிராமப்புறங்களில் விளைநிலங்களில் பயிரிடப்படும் கேரட், பீட்ரூட், அவரை உள்ளிட்ட மலைக்காய்கறிகள் அதற்கு உணவாக கிடைக்கிறது. இதனால் வனப்பகுதியில் இருந்து வரும் வனவிலங்குகள் வனப்பகுதிக்கு திரும்புவது இல்லை. தேயிலை தோட்டங்களிலும், விவசாய நிலங்களிலும், மக்கள் குடியிருக்கும் பகுதியிலும் வனவிலங்குகள் சுற்றித்திரிகின்றன. நகர்ப்புறத்தில் இருந்து வனவிலங்குகளை வனப்பகுதிக்கு வனத்துறையினர் விரட்டுவது இல்லை. சில நேரங்களில் வனவிலங்குகள் முக்கிய சாலைகள் வழியாக உலா வருகின்றன.
இந்த நிலையில் ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் இரண்டு காட்டெருமைகள் உலா வந்தன. இதனை கண்ட ஊழியர்கள் பூங்காவின் நுழைவு வாயிலை மூடினர். இதனால் அந்த காட்டெருமைகள் பூங்கா அருகே உள்ள ஒரு தனியார் பங்களாவுக்குள் புகுந்து, அங்கு வளர்ந்திருந்த புற்களை மேய்ந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பங்களாவுக்குள் புகுந்த காட்டெருமைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
இருப்பினும், காட்டெருமைகள் பங்களாவுக்குள்ளேயே சுற்றி, சுற்றி வந்தன. அவற்றை வெளியேற்றவே முடியவில்லை. அதன் பின்னர் தாவரவியல் பூங்காவை சுற்றி சரிவர சுற்றுச்சுவர் அமைக்கப்படாததால், பங்களாவுக்குள் இருந்து காட்டெருமைகள் தாவரவியல் பூங்காவுக்குள் புகுந்தன. அந்த காட்டெருமைகள் பூங்காவின் புல்வெளியில் உலா வந்தன. அப்போது அங்கு மலர்களை ரசித்து கொண்டு இருந்த சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
அதனை தொடர்ந்து பூங்கா ஊழியர்கள் மற்றும் வனத்துறையினர் காட்டெருமைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த போலீசார் இரண்டு பேர் காட்டெருமைகளை பார்த்ததும், வாகனத்தை கீழே போட்டு விட்டு பயத்தில் ஓடினர். அதனை தொடர்ந்து ராஜ்பவன் சாலை வழியாக காட்டெருமைகள் சென்று ராஜ்பவனையொட்டி உள்ள வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் திடீரென பகல் நேரத்தில் காட்டெருமைகள் உலா வந்து உள்ளதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பூங்காவை சுற்றிலும் கான்கிரீட் சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.