அதிமுக பாஜகவுக்கு கொள்கை ஒன்று தான்: ப. சிதம்பரம்
சென்னை: அ.தி.மு.கவும், பாஜகவும் ஒரே கொள்கை உடைய கட்சிகள், சேது சமுத்திரத் திட்டத்தை இரண்டு கட்சிகளுமே எதிர்ப்பது இதற்கு மிகச் சிறந்த உதாரணம்' எனத் தெரிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்.
லோக்சபா தேர்தலுக்குப் பின் அதிமுக, பாஜகவுடம் கூட்டணி வைத்துக் கொள்ளும் எனவும், அதற்காகத் தான் காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளை விமர்சிப்பதைப் போன்று, பாஜகவை ஜெயலலிதா விமர்சிப்பதில்லையென்றும் சிதம்பரம் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளார்களைச் சந்தித்த சிதம்பரம், ‘ஜெயலலிதாவும், மோடியும் நண்பர்கள், அதிமுகவும், பாஜகவும் ஒரே கொள்கையுடைய கட்சிகள்' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக அவர் கூறியதாவது :-
5 முனைப் போட்டி....
தமிழகத்தில் 5 முனை போட்டிகள் நடக்கிறது. காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இதனால் ஓட்டுகள் சிதற கூடியதாக உள்ளது. எந்த தொகுதியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை கூற முடியாது. காங்கிரஸ் கட்சி நம்பிக்கையுடன் மக்களை சந்திக்கிறது. வெற்றி பெறுவோம் என்ற மனஉறுதியுடன் உள்ளோம்.
தமிழகம் முழுவதும் பிரச்சாரம்....
வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வெளியானதும் நான், தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்வேன். டெல்லி இமாம், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். அதுபோல் நாடு முழுவதும் முஸ்லிம் தலைவர்கள் ஆதரவு தந்து வருகின்றனர்.
ஒரே கொள்கை உடைய கட்சிகள்...
பாரதீய ஜனதா ஆட்சியால் சிறுபான்மை, தாழ்த்தப்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என அச்சம் ஏற்பட்டதால் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கின்றனர். காங்கிரஸ் கட்சிதான் மதசார்பற்ற ஆட்சியை தரும் என கருதுகின்றனர். கடந்த 2004, 2009-ம் ஆண்டுகளில் கருத்து கணிப்புகளை மாற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. அதுபோல் இந்த தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும்.
இதுவே சாட்சி....
தமிழகத்தில் தேர்தல் பிரசார கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா, காங்கிரஸ் கட்சியை மட்டும் திட்டி வருகிறார். பாரதீய ஜனதா பற்றி பேசுவதில்லை. அ.தி.மு.க.வும், பாரதீய ஜனதா கட்சியும் ஒரே கொள்கை உடையது. சேது சமுத்திர திட்டத்தை இரு கட்சிகளும் எதிர்த்து வருவதே இதற்கு சாட்சியாகும். ஜெயலலிதாவும், மோடியும் நட்பு கொண்டவர்கள் என்பது அனைவரும் அறிந்ததுதான்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.