பிரசாரம் செய்ய யாராவது வருவீங்களாய்யா... மேலிடத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பாஜக
சென்னை: தமிழக பாஜகவை இரண்டாகப் பிரித்துப் பார்க்கலாம். லோக்சபா தேர்தலுக்கு முன்பு, லோக்சபா தேர்தலுக்குப் பின்பு என்று. லோக்சபா தேர்தலுக்கு முன்பு வரை மேலிடத்தின் பரிவு, பாசம், கவனிப்பு பலமாக இருந்தது. ஆனால் தேர்தல் முடிந்து மோடி பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்த பிறகு அது காணாமல் போய் விட்டது போலத் தெரிகிறது. இப்போது உள்ளாட்சி இடைத் தேர்தல் குறித்து மேலிடத்தில் சற்றும் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் தேர்தல் பிரசாரத்திற்காவது யாராவது வருவார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மாநிலத் தலைமையும் கூட அதிமுகவின் அசுர பலத்திற்கு முன்பு எப்படி மோதுவது, எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டுள்ளதாக சொல்கிறார்கள்.
இதன் காரணமாக வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் தங்களது உள்ளூர் கட்சிப் பிரமுகர்களுடன் ஓட்டுக் கேட்டு வருகின்றனர். மாநிலத் தலைமையிலிருந்தும், மத்தியிலிருந்தும் தலைவர்கள் தீவிரப் பிரசாரம் செய்தால் நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் கட்சியினர் மத்தியில் நிலவுகிறதாம்.
அதிமுகவுக்குப் போட்டியாக அதிரடி
அதிமுகவை எதிர்த்து உள்ளாட்சி இடைத் தேர்தலில் போட்டியிட திமுக, தேமுதிக, மதிமுக, பாமக என எந்த முக்கியக் கட்சியும் போட்டியிட முன்வரவில்லை. ஒதுங்கி விட்டன. ஆனால் பாஜக மட்டும் அதிரடியாக போட்டியிடப் போவதாக அறிவித்தது. வேட்பாளர்களையும் அறிவித்தது.
அதிரடியாக கிடைத்த பதிலடி
ஆனால் பாஜகவுக்கு அதிர்ச்சி தரும் வகையில் பல இடங்களில் பாஜக வேட்பாளர்களுக்கு குறிப்பிட்ட தரப்பிலிருந்து வந்த கடும் நெருக்கடி காரணமாக வேட்பு மனு தாக்கல் செய்த சில பாஜக வேட்பாளர்கள் போட்டியிலிருந்து விலகி அதிமுகவுக்கு ஆதரவாக வழி் விட்டு கட்சித் தலைமைக்கு ஷாக் கொடுத்தனர்.
சற்றும் சளைக்காத தமிழிசை
ஆனால் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் சளைக்காமல் அதிமுகவையும், அதிமுக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேர்தல் ஆணையத்தையும் கடுமையாக விமர்சித்தார். தேர்தல் ஆணையமும் சூடான பதில் கொடுத்தது. இதையடுத்து கோர்ட்டுக்குப் போகப் போவதாக கூறி விட்டார் தமிழிசை.
சூடு குறைந்து விட்டதே
இப்படி மாநிலத் தலைமை ஒருபக்கம் சூடாக இருந்தாலும், தேர்தல் பிரசாரப் பணிகள் குறித்து படு மந்தமாக இருப்பதாக கூறுகிறார்கள் பாஜகவினர். மாநிலத் தலைமை மட்டுமல்லாமல் மத்தியத் தலைமையும் கூட அலட்சியம் காட்டுவதாக அவர்கள் குறைபட்டுக் கொள்கிறார்கள்.
யார் வந்து பிரசாரம் செய்வது
தேர்தல் பிரசாரத்திற்கு யார் வரப் போகிறார்கள் என்று தெரியவில்லை. எந்தத் தலைவரும் வருவது போலவும் தெரியவில்லை. மாநிலத் தலைமையில் நல்ல பேச்சாற்றல் கொண்ட தலைவர்கள் உள்ளனர். அவர்களின் பிரசாரத் திட்டம் இதுவரை அறிவிக்கப்படவில்லை. அதேபோலமத்தியிலிருந்து யாராவது வருவார்களா என்பதும் தெரியவில்லை.
உள்ளாட்சி என்பதால் அலட்சியமா...
ஒரு வேளை உள்ளாட்சி இடைத் தேர்தல்தானே என்றுஅலட்சியமாக மாநிலத் தலைமையும், மத்திய தலைமையும் இருக்கிறதா என்ற ஐயப்பாடும் பாஜகவினரிடம் எழுந்துள்ளது.
இப்படி இருந்தால் எப்படி
இப்போது களத்தில் அதிமுக மட்டுமே உள்ளது. மற்ற கட்சிகள் ஒதுங்கியுள்ளன. இதை சரியாக பயன்படுத்தி பிற கட்சிகளின் ஆதரவையும் திரட்டி அதிக வாக்குகளைப் பெற்று அதிமுகவுக்கு நெருக்கடி தரலாம். இதை வைத்து அடுத்த சட்டசபைத் தேர்தலில் சற்று தெம்பாக சந்திக்கலாம். ஆனால் கட்சித் தலைமை தவற விட்டுவிடும் போலத் தெரிகிறதே என்று பாஜகவினர் அங்கலாய்க்கின்றனராம்.
அமைச்சர்கள் காட்டும் சுறுசுறுப்பு
மறுபக்கம் இடைத் தேர்தல்தான் என்றாலும் கூட அமைச்சர்களை மொத்தமாக இறக்கி அதிமுக பார்க்கும் வேலையைப் பார்த்து பாஜகவினரே பிரமிக்கின்றனர். அதை விட முக்கியமாக முதல்வரே பிரசாரத்தில் குதிக்கவிருப்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டி, அதிமுகவினரே இவ்வளவு சீரியஸாக இருக்கும்போது நாமும் அப்படி இல்லாமல் போனது ஏன் என்றும் வருத்தப்படுகிறார்கள்.
ஏன் இவர்கள் பேசலாமே
தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், வானதி சீனிவாசன், எச்.ராஜா, இல.கணேசன் போன்றோர் நல்ல பேச்சாளர்களும் கூட. அவர்களின் பிரசாரத் திட்டம் இதுவரை அறிவிக்கப்படாதது ஏன் என்றும் தெரியாமல் பாஜகவினர் குழம்பிப் போயுள்ளனராம்.
பாஜக தலைமையின் மனதில் ஓடுவது என்னவோ.. !