கூட்டிக் கழிச்சுப் பார்த்தாலும் "கணக்கு" சரியா வரலையே.. குழப்பத்தில் பாஜக, தேமுதிக!
சென்னை: தமிழகத்தில் தங்களுக்கு அதிகளவில் உறுப்பினர்கள் இருப்பதாக பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூறி வந்தன. ஆனால், சட்டசபை தேர்தலில் எதிர்பார்த்த அளவிற்கு வாக்குகள் கிடைக்காதது இக்கட்சிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் பாமக ஓரளவிற்கு நல்ல வாக்குகள் பெற்றுத் தப்பித்துக் கொள்ள, பாஜக, தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி போன்றவை வாக்கு சதவீதத்தில் மிகவும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. இந்தக் கட்சிகளுக்கு எதிர்பார்த்த வாக்குகள் தேர்தலில் பதிவாகவில்லை.
சுமார் 25 லட்சம் உறுப்பினர்கள் உள்ளதாகச் சொல்லிக் கொள்ளும் தேமுதிகவிற்கு வெறும் 10 லட்சம் வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. இதேபோல், 50 லட்சம் உறுப்பினர்கள் உள்ளதாக சொல்லி வரும் பாஜகவிற்கு 2.7 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தது.
மாற்றம் தேடி...
இதனால் தங்களது கட்சி உறுப்பினர்களே மாற்றம் தேடி வேறு கட்சிக்கு வாக்களித்து விட்டார்களா என்ற குழப்பம் இந்த இரண்டு கட்சிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தனது கட்சி மாவட்ட செயலாளர்களுடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சந்தேகம்...
இந்தக் கூட்டத்தில் நிஜமாகவே தேமுதிகவில் மொத்தம் உள்ள உறுப்பினர்கள் எத்தனைப் பேர் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளார் விஜயகாந்த். அதற்கு, 25 லட்சம் பேர் என மாவட்ட செயலாளர்கள் பதிலளித்துள்ளனர்.
மீதி எங்கே..?
அப்படியானால், சட்டசபைத் தேர்தலில் தேமுதிகவிற்குப் பதிவான 10 லட்சம் வாக்குகள் போக, மீதமுள்ள உறுப்பினர்களின் வாக்குகள் என்னவாயின. அவர்கள் வேறு கட்சிக்கு வாக்களித்து விட்டார்களா? என கோபமாகக் கேட்டுள்ளார் விஜயகாந்த்.
தொண்டர்கள் அதிருப்தி...
அதற்கு தேமுதிகவின் கூட்டணி முடிவால் கட்சித் தொண்டர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக மாவட்ட செயலாளர்கள் பதிலளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, தொடர்ந்து கட்சிப் பணியில் தீவிர ஆர்வம் காட்ட அவர்களிடம் வலியுறுத்தியுள்ளார் விஜயகாந்த்.
மிஸ்டு கால் பாஜக...
இதேபோல், பாஜகவும் தமிழகத்தில் மிஸ்டு கால் திட்டம் மூலம் 50 லட்சம் உறுப்பினர்களாக சேர்த்துள்ளதாக பெருமையாகக் கூறி வந்தது. ஆனால், தேர்தல் முடிவுகளைப் பார்க்கும் போது, மிஸ்டுகாலை பாஜகவிற்கு கொடுத்துவிட்டு, ஓட்டை வேறு கட்சிக்கு பலர் போட்டு விட்டது உறுதியாகியுள்ளது.
குழு...
இந்த தோல்விக்கான காரணம் பற்றி ஆராய்வதற்காக கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் அகில இந்திய செயலாளர் சந்தோஷ் முன்னிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், இல.கணேசன், எச்.ராஜா, சி.பி. ராதாகிருஷ்ணன், கேசவ வினாயகம், வானதி சீனிவாசன், சரவணபெருமாள், செல்வக்குமார் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தனித்துப் போட்டி முடிவு...
கடைசியில் எடுத்த தனித்து போட்டி முடிவை ஆரம்பத்திலேயே எடுத்திருந்தால், இன்னும் கனிசமான ஓட்டுக்களை பெற்று இருக்க முடியும் என அப்போது அவர்கள் கட்சித் தலைமையிடம் கூறியதாகத் தெரிகிறது.