இரவு பகலாக கூடிக் கூடிப் பேசும் பாஜக - தேமுதிக... இன்னும் விடியலைத்தான் காணோம்!
சென்னை: பாஜக, தேமுதிக இடையிலான தொகுதிப் பங்கீடு தொடர்பாக இரவு பகலாக விழுந்து விழுந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள் இரு கட்சியினரும். ஆனாலும் இன்னும் உன்பாடுதான் எட்டப்பட முடியாமல் இழுத்துக் கொண்டிருக்கிறது.
கடந்த பல வாரமாகவே இரு தரப்பும் படு தீவிரமாகப் பேசி வந்தாலும் கூட தேமுதிகவின் தொடர் பிடிவாதம் காரணமாக பெரும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
அதிமுகவுக்கு முன்பே இவர்கள் தொகுதிப் பங்கீட்டை முடித்து கூட்டணியையும் அறிவித்து களத்திலும் இறங்கியிருக்க முடியும். ஆனால் தேமுதிக, அதைத் தொடர்ந்து பாமக என பிடிவாதங்கள் தொடர்வே பாஜக ஸ்தம்பித்துப் போய் நிற்கிறது.
இவர்களின் இந்த இழுபறியால் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கும் தனது சென்னை வருகையை ஒத்திவைத்து விட்டார்.
இந்த நிலையில் நேற்று கூட இரு கட்சிகளும் ராத்திரியில் சந்தித்துப் பேசியுள்ளன. பாஜக குழுவினர் தேமுதிக அலுவலகத்திற்குப் போய் பேசினர். பின்னர் பத்து மணிக்கு மேல் குழுவினர் கிளம்பிச் சென்றனர்.
இந்த நிலையில் இன்றைக்குள் எங்களுக்கு சாதகமான முறையில் தொகுதி்ப் பட்டியலை தர வேண்டும் என்று பாஜகவுக்கு தேமுதிக கெடு விதித்துள்ளதாம்.
தற்போது தேமுதிக - பாமக இடையே சேலம், விழுப்புரம், கடலூர் ஆகிய தொகுதிகளுக்குத்தான் பெரும் சிக்கல் நிலவுகிறதாம். இதை தேமுதிக கேட்கிறது. ஆனால் இவற்றை ஏற்கனவே பாமக தனது 10 தொகுதிகளில் இடம் பெற வைத்து பிரசாரத்தையும் மேற்கொண்டு வருகிறது. எனவே விட்டுத் தர மறுக்கிறது.
அதேபோல கள்ளக்குறிச்சி, வேலூர் ஆகிய தொகுதிகளையும் தேமுதிக கேட்கிறது. ஆனால் இதை பாரிவேந்தரின் கட்சி வேண்டும் என்கிறதாம்.
தென் மாவட்டத்தில் தூத்துக்குடியை தேமுதிக கேட்கிறது. ஆனால் இதை எக்காரணம் கொண்டும் விட்டுத் தர முடியாது என்று மதிமுக கூறி விட்டது. இப்படி எகனைக்கு முகனையாக இழுபறியாகக் கிடக்கிறது கூட்டணியின் தொகுதிப் பங்கீடு சிக்கல்.
இந்த நிலையில்தான் இன்றைக்குள் முடிவு தெரிய வேண்டும். நாளை எங்களது தலைவர் பிரசாரத்தைத் தொடங்கவுள்ளார். அதற்கு முன்பு நாங்கள் வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும் என்று பாஜகவிடம் கண்டிஷனாக சொல்லி விட்டதாம் தேமுதிக. இருந்தாலும் பாஜக நம்பிக்கையுடன் உள்ளதாக கூறுகிறார்கள்.