முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் உடன் ஹெச். ராஜா திடீர் சந்திப்பு
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா.
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை பாஜக தேசிய செயலர் ஹெச். ராஜா இன்று இரவு சந்தித்து பேசியுள்ளார்.
அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க வரும்படி ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்தார். அதன்படி இன்று முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றுக்கொண்டார்.
அவருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதன்மூலம் தமிழகத்தின் 13-வது முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றுள்ளார். முதல்வரை தொடர்ந்து அமைச்சர்கள் 30 பேரும் பதவியேற்றுக்கொண்டனர்.
இதையடுத்து. நாளை மறுநாள் காலை 11 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கு கோருகிறார். 15 நாள் அவகாசம் உள்ள நிலையில் 3 நாளில் நம்பிக்கை வாக்கு கோர எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்துள்ளார்.
இதனிடையே ஜெயலலிதாவின் ஆட்சியை விரைவில் அமைப்போம் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் தங்களையே ஆதரிக்கின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு பாஜக தேசிய செயலர் ஹெச். ராஜா வந்தார். அங்கு ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து சிறிது நேரம் பேசினார். பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.