சரிந்து போன பாஜகவின் "கெத்து".. அடுத்து என்ன செய்யப் போகிறது?
சென்னை: விஜயகாந்த்தும் கைவிட்டு விட்டார். பாமகவும் முகத்தைத் திருப்பிக் கொண்டு விட்டது. இப்போது அடுத்து என்ன செய்வது என்று தெரியாத நிலையில் பாஜக. இப்போதைக்கு அதன் முன்பு உள்ள ஒரே வாய்ப்பு அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திப்பது அல்லது தனித்துப் போட்டியிட்டு மண்ணைக் கவ்வுவது.
இதுவரை விஜயகாந்த்தை நம்பி பாமகவைக் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டது பாஜக. மேலும் மதிமுகவையும் மீண்டும் கூட்டணிக்கு இழுக்கவும் ஆர்வம் காட்டவில்லை.
காரணம் விஜயகாந்த் மட்டும் வந்தால் போதும்,மற்றவர்கள் தேவையில்லை என்ற அதீத நம்பிக்கையே. ஆனால் தற்போது விஜயகாந்த் பெப்பே காட்டியிருப்பதால் அதிர்ச்சியில் உள்ளது பாஜக.
திமுக பக்கம் திரும்பிய தேமுதிக
தேமுதிக திமுக பக்கம் திரும்பி விட்டது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இரு தரப்பும் அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டியது மட்டுமே பாக்கி.
ஏமாற்றத்தில் பாஜக
தேமுதிகவின் இந்த முடிவால் பாஜகதான் பெரும் ஏமாற்றமடைந்துள்ளது. விஜயகாந்த்தை அந்தக் கட்சி பெரிதும் நம்பியிருந்தது. எப்படியும் வந்து விடுவார் என நம்பியது.
இருந்தவர்களும் போயாச்சு
விஜயகாந்த்தை நம்பி பாமகவைக் கண்டு கொள்ளவில்லை. மதிமுகவை மீண்டும் சேர்க்கவும் ஆர்வம் காட்டவில்லை. இ்ப்போது பாமக, பாஜகவுக்கு கதவை சாத்தி விட்டது.
வேற வழி
இப்போது பாஜகவுக்கு வேறு வழியே இல்லை. அதிமுகவுடன் மட்டுமே அது கூட்டு சேர முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அல்லது இருக்கிற கட்சிகளுடன் தனி அணியாக போட்டியிட வேண்டும்.
காங்கிரஸை விட தேவலாம்
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸை விட கூடுதல் வாக்கு சதவீதத்தைப் பெற்றது பாஜக. அந்த வகையில் பாஜக உடன் வருவது அதிமுகவுக்கும் பலம்தான்.
இப்போதைக்கு இவர்கள்
தற்போது பாஜக கூட்டணியில், சரத்குமார், ஏ.சி சண்முகம், பச்சைமுத்து, தேவநாதன் ஆகிய சிறு தலைவர்கள்தான் உள்ளனர். பாஜக, அதிமுக பக்கம் போனால், அதிமுகவிடம் உள்ள சில முஸ்லீம் கட்சிகள் வெளியேறும் வாய்ப்புள்ளது.
பார்க்கலாம் என்ன நடக்கிறது என்பதை.