இந்தி பேசாதவர்களை மத்திய அரசு 2ம் தர குடிமக்களாக பாவிக்கிறது... காங். கண்டனம்
புதுவை: தமிழர்கள் மற்றும் இந்தி பேசாத மக்களை மத்திய அரசு 2ம் தர குடிமக்களாகவே பாவிப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
மத்தியில் பாஜக அரசு பதவியேற்ற நாள் முதற்கொண்டு அனைத்து துறைகளிலும் இந்திக்கு முதலிடம் கொடுக்கப்படுவதாக பரவலாக குற்றச்சாட்டுக் கூறப்படுகிறது. அதனை மெய்ப்பிப்பது போலவே முக்கிய அரசு சுற்றறிக்கைகளும் இந்தியிலேயே அனுப்பப் படுகிறது.
இந்நிலையில், முக்கிய சிவில் சர்வீஸ் முதுநிலைத் தேர்வுகளில் ஆங்கிலக் கேள்விகளுக்கு பதில் அளித்தால் கிடைக்கக் கூடிய 22 மதிப்பெண்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படாது என நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் பேச்சால் சர்ச்சை உண்டாகியுள்ளது.
எனவே, இந்தி தெரியாத மக்களை மத்திய அரசு இரண்டாம் தர குடிமக்களாக பாவிப்பதாக காங்கிரஸ் தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக புதுவை காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
2ம் தர குடிமக்கள்....
மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசு தமிழக மக்களையும் மற்றும் இந்தி பேசாத மாநிலங்களில் வாழும் மக்களையும் 2-ம்தர குடிமக்களாகவே நினைக்கிறது.
முன்னுரிமை...
எனவேதான் நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் திரேந்திர சிங் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆர்.எஸ். போன்ற முக்கிய சிவில் சர்வீஸ் முதுநிலை தேர்வுகளில் ஆங்கில கேள்விகளுக்கு பதில் அளித்தால் கிடைக்கக்கூடிய 22மதிப்பெண்கள் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என்றும், மேலும் ஆங்கில அறிவை சோதிக்கும் கேள்விகளுக்கு நன்றாக பதில் அளித்தாலும் முன்னுரிமை கொடுக்கப்படாது என்றும் அறிவித்துள்ளார்.
தேர்வாணைய சட்டம்...
திறனறிவு தேர்வில் 2-ம் தாளில் 8கேள்விகளுக்கு ஆங்கில புலமையை சோதிக்க 22மதிப்பெண்கள் 2011-ம் ஆண்டு கொண்டுவந்த மேற்கண்ட தேர்வாணைய சட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்தது.
திருத்தம் தேவை...
இந்த 22மதிப்பெண்களை இந்தி அல்லாத மற்ற மொழிகளில் தேர்வு எழுதுபவருக்கு கிடைக்கக்கூடிய வகையில் திருத்தம் கொண்டுவர வேண்டும்' என இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.