களைகட்டும் குற்றாலம் சீசன்.. இன்று முதல் ஐந்தருவியில் படகு சவாரி துவக்கம் !
தென்காசி: குற்றாலம் வெண்ணை மடம் குளத்தில் தண்ணீர் நிரம்பியுள்ளதால் இன்று முதல் படகு சவாரி துவங்கப்பட உள்ளது என சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக, கேரளா எல்லையான மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் தென்மேற்கு பருவமழையின் காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் சீசன் காலமாகும். இந்த சீசன் நேரத்தில் அருவிகளின் நகரமான குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் ஆனந்த குளியல் நடத்த லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.
கடந்த நில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழை காரணமாக, குற்றாலம் ஐந்தருவி, மெயின் அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஐந்தருவி செல்லும் வழியில் உள்ள வெண்ணமடை குளத்தில் படகு குழாமுக்கு போதிய தண்ணீர் இல்லாததால் படகு போக்குவரத்து தொடங்கப்படாமல் இருந்து வந்தது. தற்போது ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் படகு சவாரி இன்று முதல் துவங்கப்பட உள்ளது.
தற்போது இங்கு 33 படகுகள் தயார் நிலையில் உள்ளன. இதில் இரண்டு இருக்கை பெடல் படகுகள், நான்கு இருக்கை பெடல் படகுகள், நான்கு இருக்கை துடுப்பு படகுகள், தனிநபர் துடுப்பு படகுகள் ஆகியவை உள்ளது.