இடிந்தகரையில் நாட்டு குண்டு வெடித்து 6 பேர் பலி: 3 பேர் படுகாயம்
நெல்லை: இடிந்தகரையில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் 6 பேர் பலியாகியுள்ளனர். 2 வீடுகள் சேதமடைந்துள்ளன.
நெல்லை மாவட்டத்தில் கடற்கரையோர பகுதிகளில் தாது மணல் பிரச்சனை ஏற்பட்டதையடுத்து இடிந்தகரை அருகே உள்ள கூத்தங்குழியில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து அந்த கிராமத்தில் உள்ள சில குடும்பங்கள் இடிந்தகரையின் மேற்குப் பகுதியில் உள்ள சுனாமி காலனியில் கடந்த சில நாட்களாக தங்கினர். இந்நிலையில் நடந்த சமரச பேச்சுவார்த்தையையடுத்து அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பினர்.
ஆனால் ஒரு குடும்பம் மட்டும் சுனாமி காலனியில் தங்கியிருந்தது. அந்த வீட்டில் நேற்று இரவு 7 மணிக்கு திடீர் என்று நாட்டு வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் அந்த வீடு இடிந்து தரைமட்டமானது. மேலும் அருகே இருந்த வீடு ஒன்றும் சேதம் அடைந்தது.
இது குறித்து தகவல் கிடைத்த தீயணைப்பு வீரர்கள், வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அந்த பகுதியில் மின்வெட்டு இருந்ததால் மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ள முடியவில்லை.
பின்னர் தான் குண்டு வெடித்ததில் தரைமட்டமான வீட்டில் செபிக்ஷன் (1), சுபிக்ஷா என்ற சுபிதா (7), சோனா (14), பிரமிளா (30) ஆகியோரின் சடலங்கள் மீட்கப்பட்டன. மேலும் ஒரு சடலம் மீட்கப்பட்டது. ஆனால் அது இன்னும் அடையாளம் காணப்படவில்லை. படுகாயமடைந்த யாகப்பன் (35) என்பவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த விஜய் (16), ரோஸ்லின் (28), ஏசுமரியான் சூசை (46) ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.