பிரேக் டான்ஸ் ஆடணும்... இல்லைனா சிஎம் நிகழ்ச்சியில் குண்டு வெடிக்கும்- மிரட்டலால் அதிர்ந்த போலீஸ்
பிரேக் டான்ஸ் ஆட ஹோட்டலில் அனுமதி மறுத்ததால் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை: சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள பிரபல ஸ்டார் ஹோட்டலில் பிரேக் டான்ஸ் ஆட அனுமதி மறுத்ததால் ஆத்திரம் அடைந்த நபர் ஒருவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிகழ்ச்சியில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை நுங்கம்பாக்கம் அண்ணா மேம்பாலம் அருகே பிரபல ஸ்டார் ஹோட்டல் ஒன்று உள்ளது. இந்த ஹோட்டலில் நேற்று முன்தினம் ரிசப்ஷன் அறையில் மர்ம கடிதம் ஒன்று கிடந்தது.
அந்தக் கடிதத்தை ஹோட்டல் ஊழியர் ஒருவர் பார்த்து அதிர்ச்சியடைந்தார். அதில் 'எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் 4வது மாடியில் குண்டு வெடிக்கும்' என்று எழுதப்பட்டிருந்தது. உடனே, ஹோட்டல் மேலாளர் அரிந்தம் குணார் அந்த கடிதத்துடன் சென்று, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தார்.
உடனே, அதிர்ச்சியடைந்த தேனாம்பேட்டை போலீசார் அப்போதே அந்த நட்சத்திர ஹோட்டல் முழுவதும் தீவிரமாக வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சோதனை நடத்தினர். அதில், எந்த வெடிகுண்டும் கண்டுபிடிக்கப்பட வில்லை. இதையடுத்து, மிரட்டல் கடிதம் வெறும் புரளி என உணர்ந்த போலீசார் எழுதியவரைத் தேடியது.
சிசிடிவி பதிவு
அதன் பின்னர் வழக்கும் பதிவு செய்து தீவிர விசாரணையை நடத்தினர். ஹோட்டலில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் பெற்று தீவிரமாக விசாரித்தனர். அப்போது, ஒரு நபர் ஹோட்டல் வரவேற்பு அறையில் உள்ள மேஜையில் ஒரு கடிதத்தை வீசிவிட்டு செல்வது தெளிவாக பதிவாகி இருந்து.
கும்பலோடு வந்தநபர்
உடனே ஹோட்டலுக்கு வந்த நபர்கள் குறித்தும், ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் பதிவு புத்தகத்தையும் ஆய்வு செய்து விசாரணை நடத்தப்பட்டது. அதில், திருவான்மியூரை சேர்ந்த அருண்குமார் என்பவர் தனது மனைவி மற்றும் நண்பர்கள் 2 பேருடன் ஹோட்டலுக்கு வந்து சென்றது உறுதி செய்யப்பட்டது.
திருவான்மியூரில் கைது
தொடர்ந்து தேனாம்பேட்டை போலீசார் அருண்குமாரை திருவான்மியூரில் நேற்று கைது செய்தனர். அதைதொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அருண்குமார், நீதிபதி உத்தரவுப்படி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
மனைவியுடன் மதுவிருந்து
பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், "தனியார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக வேலை செய்து வரும் அருண்குமார், கடந்த 2ம் தேதி இரவு அண்ணா மேம்பாலம் அருகே உள்ள ஸ்டார் ஹோட்டலுக்கு மது விருந்துக்கு தனது மனைவி, 2 ஆண் நண்பர்களுடன் வந்துள்ளார்.
டான்ஸுக்கு அனுமதி மறுப்பு
இரவு முழுவதும் மது அருந்திவிட்டு 'பிரேக் டான்ஸ்' ஆட முடிவு செய்து ஹோட்டல் உள்ளே சென்றுள்ளார் அருண்குமார். அப்போது ஹோட்டல் ஊழியர்கள் அருண்குமாரிடம், உங்களுடன் மனைவியை மட்டும்தான் அனுமதிக்க முடியும். இந்த நடன நிகழ்ச்சியில் ஜோடியாகத்தான் உள்ளே செல்ல முடியும் என்று கூறியுள்ளனர். உடன் வந்த இருவரை அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளனர்.
ஆத்திரத்தில் மிரட்டல்
இதன் காரணமாகவே ஆத்திரமடைந்த அருண்குமார் ஹோட்டல் வரவேற்பு அறையில், பிரேக் டான்சுக்கு அனுமதி அளிக்காததால் முதல்வர் எடப்பாடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் குண்டு வெடிக்கும் என எழுதி வைத்துவிட்டு சென்றிருக்கிறார். தற்போது அருண்குமார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.