”பார்வையற்றோர் வாக்கும் பாதுக்காக்கப்படும் இனி” – பிரெய்லி முறை வாக்குப்பதிவு அறிமுகம்
சென்னை: பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்காக பிரெய்லி வசதியுடன் வாக்குப்பதிவு இயந்திரம் வடிவமைக்கப் பட்டுள்ளது.
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கும் வகையில், முதன் முறையாக பிரெய்லி எழுத்துகளுடன் கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு இதுவரை நடத்தப்பட்ட தேர்தலில்களின் போது பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், உதவியாளர்கள் வழிகாட்டுதல் படியே தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வந்தனர்.
ஓட்டுப்பதிவு ரகசியமாக இல்லை:
இதன் மூலம், இத்தகைய மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கும் வேட்பாளர்களின் ரகசியம் வேறு ஒருவருக்கு தெரியும் நிலை இருந்தது. மறைமுக வாக்களிக்கும் முறைக்கு எதிராகவும் இந்த நடைமுறை இருந்து வருகிறது.
பிரெய்லி எழுத்துகள்:
இந்த நிலையை பெருமளவு குறைக்கும் வகையில், 2013 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பிரெய்லி எழுத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வசதி தங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கின்றனர் பார்வை மாற்றுத்திறனாளிகள்.
வாக்களிப்பது எளிது:
இந்த முறையில் வாக்களிப்பவர்களுக்கு, வாக்குச்சாவடிகளில் பிரெய்லி குறிப்புகளுடன் கூடிய புத்தகம் வைக்கப்பட்டிருக்கும். இதில் சம்பந்தப்பட்ட தொகுதியில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்களின் பெயர்கள், வரிசை எண்களுடன் பிரெய்லி எழுத்துகளுடன் ஒட்டப்பட்டிருக்கும்.
தடவிப் பார்த்து வாக்களிக்கலாம்:
உதாரணமாக ஒரு பார்வையற்ற மாற்றுத்திறனாளி, எண் வரிசையில் 3 ஆவது வேட்பாளருக்கு வாக்களிக்க விரும்பினால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தடவிப்பார்த்து, மூன்று என்ற எண்னை குறிக்கும் பிரெய்லி எழுத்துகளுக்கு நேரே உள்ள பொத்தானை அழுத்தி வாக்களிக்கலாம். இதனால் மற்றவர்களின் உதவி மாற்றுத்திறனாளுக்குத் தேவைப்படாது என்கின்றனர் தேர்தல் அலுவலர்கள்.
படித்தவர்களுக்கு மட்டுமே பயன்:
எனினும் இந்த பிரெய்லி நடைமுறையால், படித்த பார்வை மாற்றுத்திறனாளிகள் மட்டுமே பயன் பெற முடியும் என்கின்றனர் மாற்றுத்திறனாளி நலசங்கத்தைச் சேர்ந்தவர்கள்.
உதவியாளர்களுக்கு அனுமதி:
பிரெய்லி எழுத்து குறித்து தெரியாத பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், தங்களுக்கு உதவியாக 18 வயதுக்கு மேல் உள்ள உதவியாளர்களை அழைத்து வரலாம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்துள்ளார்.
வாக்குச் சுதந்திரம்:
பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளும் தங்களது வாக்குகளை சுதந்திரமாக யாருடைய உதவியும் இன்றி பதிவு செய்யும் இந்த வசதி அனைத்து தேர்தல்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.