திண்டுக்கல்லில் திமுக முப்பெரும் விழா.. அத்தனை ஹோட்டல்களிலும் பிரியாணி காலி
திண்டுக்கல்லில் நடைபெறும் முப்பெரும் விழாவையொட்டி பிரியாணி கடைகளில் நீண்ட நேரம் காத்திருந்துவிட்டு பிரியாணியை சுவைத்தனர் திமுகவினர்.
திண்டுக்கல்: பிரியாணிக்கு பிரபலமான திண்டுக்கல்லில் திமுகவின் முப்பெரும் விழாவையொட்டி அங்குள்ள கடைகளில் திமுகவினர் மொய்த்தனர். இதனால் கட்டுகடங்காத கூட்டம் காணப்பட்டது.
அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா, பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் என முப்பெரும் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று அண்ணா பிறந்த நாளையொட்டி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
நாளை பெரியார் பிறந்தநாளையொட்டி சென்னை சிம்சன் பாலம் அருகே உள்ள சிலைக்கு முக ஸ்டாலின் மாலை அணிவிக்கவுள்ளார். அதற்கு இடையில் திண்டுக்கல்- வத்தலகுண்டு சாலை அருகே உள்ள அண்ணா திடலில் முப்பெரும் விழா பொதுக் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.
திமுகவினர் பங்கேற்பு
இதற்காக நேற்றைய தினம் திண்டுக்கல் வந்த திமுக செயல்தலைவர் முக ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள பல்வேறு ஊர்களில் இருந்தும் திமுகவினர் வந்துள்ளனர்.
பிரியாணி கடைகளில்...
இதனையொட்டி திண்டுக்கல் வந்துள்ள கழக உடன்பிறப்புகள் நேராக அங்குள்ள பிரபல பிரியாணி கடைகளுக்கு சென்றனர். திண்டுக்கல்லில் பொன்ராம், தலப்பாக்கட்டி மற்றும் வேணு பிரியாணி உள்ளிட்ட கடைகளில் புகுந்தனர். மாலையில் தான் பொதுக்கூட்டம் என்பதால் கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து அவர்கள் பிரியாணியை சுவைத்து மகிழ்ந்தனர்.
தலைகளை காணமுடிந்தது
இந்த 3 கடைகள் இல்லாமல் திண்டுக்கல் முழுவதும் இந்த கடைகளுக்கு கிளைகளும் உண்டு என்பதால் அங்கு உடன்பிறப்புகளின் தலைகளை காணமுடிந்தது. இதனால் பிரியாணி கடைக்காரர்கள் நன்றாக கல்லா கட்டினர்.
டாஸ்மாக் கடைகளில்...
பொதுவாக எந்த கட்சியின் பொதுக் கூட்டம் என்றாலும் முதலில் தொண்டர்கள் டாஸ்மாக் கடைகளில்தான் கூட்டம் அலைமோதும். ஆனால் திண்டுக்கல்லை பொருத்தமட்டில் டாஸ்மாக்கை காட்டிலும் பிரியாணிதான் பிரபலம் என்பதால் மற்ற ஊர்களில் இருந்து வந்தவர்கள் மூக்கு பிடிக்க பிரியாணியை உண்டு மகிழ்ந்தனர்.