யாருக்கான பட்ஜெட் இது? கொஞ்சம் இதை பாருங்க
தேர்தலை எதிர்க்கொள்ள பாஜகவின் உத்தி தான் 2018 பட்ஜெட் என்று பல்வேறு தரப்பினரிடமிருந்து விமர்சனம் எழுந்துள்ளது
Recommended Video
சென்னை: விவசாயிகளுக்கும், தொழில்முனைவோருக்கு இந்த பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதற்கு காரணம் தேர்தலுக்காக தான் மக்களுக்காக அல்ல என்று எதிர்க்கட்சிகள் பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன
பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட நடப்பாண்டுக்கான பட்ஜெட்டை நேற்று ஜேட்லி தாக்கல் செய்தார். தனி மனித வருமான வரி, உள்கட்டமைப்பு திட்டங்கள் உள்ளிட்ட பல அறிவிப்புகளை எதிர்ப்பார்த்தவர்களுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் விவசாயம், தொழில்முனைவோர், சுகாதார காப்பீடு என்று பல திட்டங்களை மத்திய அரசு அள்ளி வீசியுள்ளது.
இத்தனை ஆண்டுகள் விவசாயத்தை பெரிதும் கண்டுக்கொள்ளாத பாஜக அரசு திடீரென அவருக்கு ஏன் கரிசனம் காட்ட வேண்டும் சலுகைகளை அறிவிக்க வேண்டும் என்று கேள்வி தான் இப்போது அனைவரின் மனதிலும் எழுந்துக்கொண்டிருக்கிறது. குறிப்பாக விவசாயிகள் மனதில்...
பொது பட்ஜெட்
நேற்று அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் அருண் ஜெட்லி பாதி நேரம் விவசாயத்தை பற்றியும், வேலைவாய்ப்பு, சுகாதார திட்டம் குறித்தே பேசிக்கொண்டிருந்தார். இதுவே எதிர்க்கட்சியினரை ஆச்சர்யப்பட வைத்தது. விவசாயிகளுக்காக ஒன்று இரண்டு அறிவிப்புகளோடு நிறுத்திக்கொள்வது தான் நடைமுறை ஆனால், ஜேட்லி நேற்றை பேச்சில் 30 முறை விவசாயிகள் என்ற வார்த்தையையும், 15 முறை விவசாயம் என்ற வார்த்தையையும் பயன்படுத்தி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
விவசாயிகளுக்கு முக்கியத்துவம்
விவசாயிகளின் வேதனை மற்றும் அவர்களின் கடினமான வாழ்க்கையை மனதில் வைத்து பல சலுகைகளை அறிவிப்பதாக பட்ஜெட் தாக்கலின் போது ஜேட்லி தெரிவித்தார். 2022க்குள் வருவாயை 2 மடங்காக உயர்த்துவது, நேரடியாக விளை பொருட்களை விற்கும் திட்டம், மூலப்பொருட்களின் விலையை குறைப்பது, கொள்முதல் நிலையங்கள் என பல திட்டங்களையும் விவசாயிகளுக்காக பாஜக அரசு இந்த முறை முன்வைத்துள்ளது.
குஜராத் தேர்தல் பாடம்
மோடியின் சொந்த மாநிலமான குஜராத் தேர்தலை மிக சர்வசாதாரணமாக வென்று விடலாம் என்ற கனவுடன் இருந்த பாஜகவினருக்கு அதனுடைய இழபறி வெற்றி பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. பட்ஜெட்டிற்கு முன்பு இந்த தேர்தல் நடத்தப்பட்டதே, மக்களுக்கு பாஜக மீதான அபிப்ராயத்தை தெரிந்துக்கொள்ளதான். எதிர்ப்பார்ப்பிற்கு மாறாக இழுபறி வெற்றி கிடைத்ததால் பட்ஜெட்டில் சாமானிய மக்களான விவசாயிகள், சிறு தொழில்முனைவோருக்கு முக்கியத்துவம் அளிக்க முடிவெடுக்கப்பட்டு அதன்படியே சலுகைகளும் அளிக்கப்பட்டுள்ளன.
ம.பி. விவசாயிகள் போராட்டம்
கடந்த ஆண்டிலிருந்து மத்திய பிரதேசத்தில் விவசாயிகளின் போராட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தமிழகம் மற்றும் ம.பி. விவசாயிகளின் போராட்டம் மொத்த நாட்டின் கவனத்தையும் திருப்பியதை அடுத்து, மத்திய அரசு விவசாயிகளை வஞ்சித்து வருவதாக பல மாநில விவசாயிகளும், மக்களும் நம்ப ஆரம்பித்தனர். இந்த களங்கத்தை துடைக்கவே இந்த முறை விவசாயிகள் மற்றும் விவசாயத்தை முன்னுறித்தி பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன
நெருங்கும் தேர்தல் காலம்
குஜராத் தேர்தலில் இழுபறி வெற்றி, ராஜஸ்தான் தேர்தலில் மூன்று இடங்களிலும் படுதோல்வி என்ற நிலையில், இந்தாண்டு ராஜஸ்தான், கர்நாடகம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் வருவதாலும் வாக்கு வங்கிகளாக கருதப்படும் சாமானிய மக்களின் கவனத்தை பெறவே இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளதாக பாஜக மூத்த நிர்வாகிகளே கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளதால் வெற்றிபெற்ற ஆக வேண்டும் என்ற நோக்கில் திடீரென சாமானியர்கள் மீது மத்திய அரசுக்கு பாசம் பிறந்துள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன
பெங்களூரு புறநகர் ரயில் திட்டம்
பெங்களூருவில் 17,000 கோடி ரூபாய் செலவில் புறநகர் ரயில் சேவை ஏற்படுத்தப்படும் என்றும், இதற்கான திட்ட பணிகள் தொடங்கப்பட்டு படிப்படியாக நிலங்களை கையகப்படுத்தி தண்டவாளங்கள் அமைக்கும் பணி தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல புறநகர் பகுதிகள் பெங்களூருடன் இணைக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. இன்னும் மூன்று மாதங்களில் கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெறும் என்பதால் இந்த அறிவிப்பு அப்பட்டமான தேர்தல் ஸ்டண்ட் என்று காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.
தனி மனிதனை கவரும் திட்டம்
உலகிலேயே மிகப்பெரிய மருத்துவ காப்பீடு திட்டமாக 10கோடி பேருக்கு ஆண்டுக்கு 5லட்சம் ரூபாய் வரை காப்பீடு வழங்கப்படும் என நிதியமைச்சர் ஜேட்லி தெரிவித்துள்ளார். அதாவது நாட்டில் உள்ள 10 கோடி பேருக்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்றும், 10 கோடி குடும்பங்களுக்கு ரூ5 லட்சம் வரையிலான சிகிச்சையை அரசு ஏற்கும் என்றும் ஜேட்லி தெரிவித்தார். இதற்காக அரசு சார்பாக சுமார் ஆயிரத்து 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜேட்லி கூறினார். தனிமனதினை கவரும் விதத்தில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் சட்டசபை தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் முதலில் அறிமுகப்படுத்தப்படும் என்று கருதப்படுகிறது.