தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் - மல்லுக்கட்ட எதிர்கட்சிகள் தயார்
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது. நிதியமைச்சர் இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
சென்னை: தமிழக சட்டசபை இன்று கூடுகிறது. நிதியமைச்சர் ஜெயக்குமார் இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார். மீனவர் பிரச்சினை, ரேசன் கடை பிரச்சினை, குடிநீர் பிரச்சினைகளை எழுப்ப எதிர்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.
தமிழக சட்டசபையில் வரும் 2017 - 18 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் டி.ஜெயகுமார் வியாழக்கிழமை தாக்கல் செய்கிறார்.இதற்காக சட்டசபையை காலை 10.30 மணிக்குக் கூட்ட பேரவைத் தலைவர் பி.தனபால் உத்தரவிட்டுள்ளார்.
23ஆம் தேதி, வரும் நிதியாண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு பேரவையில் நிறைவேற்றப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து, நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து அமைச்சர் டி.ஜெயகுமார் உரையாற்றவுள்ளார்.
முதல் பட்ஜெட்
எடப்பாடி பழனிசாமி அரசின் முதல் பட்ஜெட் இதுவாகும். அத்துடன் நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜெயக்குமார், முதல்முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். ஆர்.கே. நகருக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் அதிமுக தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா அறிவித்த இலவச செல்போன் உள்ளிட்ட சில புதிய திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓபிஎஸ் அணி
அதிமுகவில் இருந்து பிரிந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் புதிதாக ஓர் அணி செயல்பட்டு வருகிறது. இந்த அணிக்கு 12 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த சர்ச்சை, பல முக்கியப் பிரச்னைகளை முன்வைத்து ஓ.பி.எஸ். அணியினர் அரசுக்கு நெருக்கடி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்ச்சை கிளப்பும் திமுக
ரேஷன் கடைகளில் சிறப்பு பொது விநியோகத் திட்டம் நிறுத்தம், வறட்சி, குடிநீர்த் தட்டுப்பாடு உள்பட பல முக்கிய விஷயங்களை திமுக எழுப்ப முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பேரவைத் தலைவர் பி.தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை திமுக கொண்டுவரலாம் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
ஊதியக்குழு
ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் பணிகளை மாநில அரசு தொடங்கியுள்ளது. இதனால், அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கான ஊதிய விகிதங்கள் அதிகரிக்கும் சூழலில், நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு அளவும் உயரும்.
கடன் சுமை
இந்த நிதி ஒதுக்கீட்டு உயர்வால், தமிழகத்தின் கடன் சுமை அளவு அதிகரிக்கும் நிலை ஏற்படும். வரும் நிதியாண்டில் தமிழகத்தின் கடன் சுமையின் அளவு ரூ.2.50 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அதீத கடன் சுமையால் பெரிய அளவிலான புதிய திட்டங்கள் ஏதும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறுவதற்கு வாய்ப்பில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எத்தனை நாள் விவாதம்
பட்ஜெட் தாக்கல் முடிந்ததும், பேரவைத் தலைவர் பி.தனபால் தலை மையில் அலுவல் ஆய்வுக்குழு கூடி பேரவையை எத்தனை நாள் நடத்துவது என்று முடிவு செய்யும். 2017-18ம் ஆண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கைகளும் 2016-17ம் ஆண்டுக் கான இறுதி துணை நிதிநிலை அறிக்கையும் மார்ச் 23ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் மீது ஒரு வாரம் விவாதம் நடக்கும் என தெரிகிறது.