"பில்டிங் ஸ்டிராங்.. ஆனா பேஸ்மென்ட் வீக்".. இதுதான் சசிகலாவின் உண்மை நிலை!
அதிமுக தொண்டர்களின் அதிருப்தியையும், எதிர்ப்பையும் சம்பாதித்து வரும் சசிகலா அதைப் பொருட்பட்த்தாமல், கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் அமர தயாராகி வருகிறார்.
சென்னை: அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலா வருவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. காரணம், முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முதல் கடைக்கோடி கருணாஸ் வரை அத்தனை பேரும் சின்னமா புகழ் பாடி வருகின்றனர். இருப்பினும் கட்சியின் அடிமட்டத் தொண்டர்களிடையே சசிகலாவுக்கு முழு அளவில் எதிர்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
முதல்வர் ஜெயலலிதாவின் திடீர் மறைவால் அரசியல் அரங்கில் மிகப் பெரிய வெற்றிடம் விழுந்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதியும் உடல் நலக்குறைவு மற்றும் வயோதிகம் காரணமாக தீவிர அரசியலில் இடம் பெறாமல் ஒதுங்கியிருக்கும் நிலையில் ஜெயலலிதாவும் இல்லாதது தமிழக மக்களையும் பெரும் குழப்பத்திலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
தமிழகத்தின் எதிர்காலம், முக்கியப் பிரச்சினைகளை எப்படி தமிழக அரசு கையாளப் போகிறது என்ற கவலையில் மக்கள் உள்ளனர். இந்த நிலையில் அஏதிமுக தலைவர்களோ வேறு கவலைகளில் உள்ளனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கவலை. மொத்தமாக யார் தலைமைப் பொறுப்பில் இருந்தால் நமக்கெல்லாம் நல்லது என்ற பெரும் கவலையில் அவர்கள் உள்ளனர்.

பொதுச் செயலாளர் பதவி
முக்கியபல் பொறுப்பான முதல்வர் பதவியில் ஓ. பன்னீர் செல்வத்தை அமர வைத்து விட்ட நிலையில் அதை விட முக்கியப் பொறுப்பான அதிமுக பொதுச் செயலாளர் பதவியை நிரப்பும் வேலையில் அதிமுகவினர் தீவிரமாகியுள்ளனர்.

சசிகலா
முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டில் வீட்டு வேலைக்கு சேர்ந்து, பின்னர் படிப்படியாக அவரது உதவியாளர், தோழி என்ற அந்தஸ்தைப் பெற்று கடைசியில் உடன் பிறவா சகோதரி என்று கூறப்படும் அளவுக்கு உயர்ந்த சசிகலாவையே பொதுச் செயலாளர் பதவியில் அமர வைக்க சசிகலா தரப்பு முடிவு செய்துள்ளது.

தலைவர்கள் ஒப்புதல்
சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியில் அமர வைக்க அதிமுகவின் குட்டித் தலைவர்கள் மனதார ஒப்புதல் அளித்து விட்டனர். குறிப்பாக முதல்வர் ஓ.பன்னீர் செல்வமே ஒப்புதல் கொடுத்து விட்டார். இதையடுத்து ஜெயா டிவியும் தனது அம்மா புகழ் பாடல்களை மறந்து விட்டு சின்னம்மாவுக்கு ஷிப்ட் ஆகி விட்டது.

தொண்டர்கள் அதிர்ச்சி, அதிருப்தி
ஆனால் அதிமுக தலைவர்களின் இந்த திடீர் முடிவு தொண்டர்களிடையே வரவேற்பைப் பெறவில்லை. பெரும்பாலான தொண்டர்கள் சசிகலாவை விரோதமாகவே பார்க்கிறார்கள். அவர் எங்களுக்கு வேண்டாம் என்று கூறி போராட்டங்களும் நடந்து வருகின்றன. அவர் வந்தால் அதிமுகவில் இருக்க மாட்டோம் என்றும் கூறி வருகின்றனர்.

பில்டிங் ஸ்டிராங்.. பேஸ்மென்ட் வீக்!
இந்த நிலையில்தான் அதிமுகவின் பொதுச் செயலாளராகப் போகிறார் சசிகலா. வடிவேலு பட பாணியில் சொல்வதானால் பில்டிங் (அதிமுக தலைமைப் பொறுப்பு) ஸ்டிராங்காகவே உள்ளது. ஆனால் பேஸ்மென்ட் (அடிமட்ட தொண்டர்களின் ஆதரவு) பலவீனமாகவே உள்ளது என்றுதான் கூற வேண்டும்.












Click it and Unblock the Notifications