விவசாயிகளுக்கு ஆதரவாக முழு கடையடைப்பு.. சாலை வெறிச்சோடியது.. சென்னை முடங்கியது
விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் சென்னை முழுவதும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
சென்னை: விவசாயிகளுக்கு ஆதரவாக முழு அடைப்புப் போராட்டத்தை நடைபெற்றது. இதனால் சென்னை ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அண்ணா சாலை, ஆழ்வார்பேட்டை என அனைத்துப் பகுதிகளிலும் கடைகள் மூடப்பட்டு வெறிச்சோடிக் காணப்பட்டன.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.
விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள், தொழிற்சங்கங்கள், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று முழு கடை அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன.
ஆதரவு
இதற்கு லாரிகள் உரிமையாளர்கள் சங்கம், மணல் லாரிகள் உரிமையாளர்கள் சங்கம், அனைத்து வியாபாரிகள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், ஆட்டோ ஓட்டுநர் சங்கம் என அனைத்துத் தரப்பும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஒன்றிணைந்து போராட்டத்தில் குதித்தன.
மளிகைக் கடைகள்
ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, அண்ணாசாலை, மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களைத் தவிர வேறு எந்தக் கடைகளும் திறக்கப்படாமல் உள்ளன.
பேருந்துகள் ஓடவில்லை
தமிழக அரசின் பேருந்துகள் வழக்கம் போல் செயல்படும் என்று அரசு அறிவித்திருந்தாலும், பேருந்துகள் மிகவும் குறைவாகவே இயக்கப்பட்டன. சாலைகளில் பேருந்துகளைப் பார்ப்பதே அரிதாக இருந்தது.
காய்கறிகள் கடைகள்
காலையிலேயே பரபரப்பாக இருக்கும் ஜாம்பாஜார் பழ மார்க்கெட் முற்றிலுமாக மூடப்பட்டது. காய்கறி கடைகள் முற்றிலும் திறக்கப்படாமல் மூடப்பட்டுள்ளன. கோயம்பேடு மார்க்கெட் அடைக்கப்பட்டதால் வேறு எங்கும் காய்கறிகள், பழங்கள் செல்லவில்லை.
பெட்ரோல் பங்க்
அத்தியாவசிய பொருளான பெட்ரோல் பங்க் மட்டும் ஆங்காங்கே திறக்கப்பட்டிருந்தன. இந்தக் கடைகளில் மட்டும் ஒரு சிலர் பெட்ரோலை நிரப்பிச் சென்றனர்.
ஸ்தம்பிப்பு
பொதுவாக, சென்னை முழுவதுமே இதே நிலையே நிலவுகிறது. எப்போதும் பரபரப்பாக காட்சி அளிக்கும் சென்னையில் கடைகள் திறக்கப்படாமல், ஆட்டோ, பேருந்துகள் இயக்கப்படாமல் இருப்பதால் வெறிச்சோடி காணப்பட்டது.