4 தொகுதி இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் ரிலீஸ் - களத்தில் 89 பேர்
தமிழகம், புதுச்சேரியில் நடைபெற உள்ள நான்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது. மொத்தம் 89 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
சென்னை: இடைத்தேர்தல் நடைபெற உள்ள தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், புதுச்சேரி நெல்லித்தோப்பு சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
தஞ்சை, அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு இன்று கடைசி நாள் ஆகும். தஞ்சையில் 14 வேட்பாளர்களும், அரவக்குறிச்சியில் 39 வேட்பாளர்களும், திருப்பரங்குன்றத்தில் 28 வேட்பாளர்களும் போட்டியிடுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நெல்லித்தோப்பு தொகுதியில் 8 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் நெல்லித்தோப்பு தொகுதிக்கும் வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் அக்டோபர் 26ம் தேதி தொடங்கி நவம்பர் 2ம் தேதி முடிவடைந்தது. நவம்பர் 3ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. வேட்புமனுக்கள் இன்றுவரை வாபஸ் பெற அவகாசம் அளிக்கப்பட்டது. டம்மி வேட்பாளர்கள் சிலர் வாபஸ் பெற்றனர். எதிர்பாராத விதமாக திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார்.
வேட்புமனுக்களை வாபஸ் பெறும் நேரம் முடிவடைந்ததை அடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதன்படி தஞ்சையில் 14 வேட்பாளர்களும், அரவக்குறிச்சியில் 39, திருப்பரங்குன்றத்தில் 28 வேட்பாளர்கள் போட்டியிடுவதாகவும், புதுச்சேரியின் நெல்லித்தோப்பு தொகுதியில் 8 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி, கடந்த சட்டமன்ற தேர்தலின் போது புகார் எண் அறிவித்த அடுத்த 10 நிமிடங்களில் ஏராளமான புகார்கள் வந்தன. ஆனால் தற்போது 3 தொகுதிகளில் புகார் எண் அறிவிக்கப்பட்டு வெறும் 4 புகார்கள் மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த புகார்கள் கூட தங்களுக்கு வாக்காளர் அட்டை கிடைக்கவில்லை என்பது பற்றியது ராணுவ படை வீரர்களை பொறுத்தவரை அடுத்த வாரம் வருகை தந்து பாதுகாப்பு பணியை ஈடுபடுவர்.
இதுவரை தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் சுமார் 1 கோடி மதிப்பலான பணம் பறிமுதல் செய்யப்பட்டு, அதில் ரூ.8 லட்சத்துக்கான உரிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டதன் காரணமாக அந்த பணம் திரும்ப ஓப்படைக்கப்பட்டுள்ளது. 41 கிலோ வெள்ளி, மற்றும் 43,200 லிட்டர் மதுபாட்டில்கள், 1 கோடி மதிப்பிலான 3.5 கிலோ தங்கம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அரவக்குறிச்சி தொகுதியை பொறுத்தவரை பணமே அல்லது பொருளே இதுவரை கைப்பற்றப்படவில்லை என்று ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.