ஆர்கே நகரில் இரட்டை இலையை தோற்கடித்து விசிலடித்த டிடிவி தினகரனின் குக்கர்
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்று குக்கரை விசிலடிக்க வைத்துள்ளார்.
Recommended Video

சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரனின் வெற்றி பெற்றுள்ளார். அவரது சின்னமான குக்கர் அபாரமாக விசிலடித்துள்ளது.
ஆர்.கே. நகரில் தொடர்ச்சியாக வென்ற இரட்டை இலையை சுயேச்சை வேட்பாளர் தினகரன் தோற்கடித்துள்ளார் தினகரன். 19 சுற்றிலும் டிடிவி தினகரனே முன்னிலை வகித்தார்.
எந்த தேர்தலிலாவது சுயேச்சை ஜெயிச்சிருக்காங்களா? என்று கேட்டார் அமைச்சர் செல்லூர் ராஜூ. 75 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் மதுசூதனன் ஜெயிப்பார் என்று அமைச்சர்கள் நம்பிக்கையோடு கூறினர்.
இது என் தத்துப்பிள்ளை என்று கூறி திமுக வேட்பாளர் மருதுகணேஷ்க்கு ஆதரவு திரட்டினார் திமுக செயல்தலைவர் ஸ்டாலின். ஆனால் தேர்தல் முடிவுகள் அனைத்தும் தினகரனுக்கு சாதகமாக அமைந்து விட்டது

தினகரன் 19 சுற்றிலும் முன்னிலை
காலை 8 முதல் வாக்குகள் எண்ணப்பட்டன. முதல் சுற்றில் தொடங்கி அனைத்து கடைசி சுற்று வரை முன்னிலை வகித்தார் டிடிவி தினகரன். அதிமுக வேட்பாளர் மருதுகணேஷ் இரண்டாவது இடத்திலும், திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 3வது இடத்தையும் பிடித்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் நான்காவது இடத்தை பிடித்தார். நோட்டாவிற்கு பதிவான வாக்குகள் கூட பாஜக வேட்பாளர் கரு. நாகராஜனுக்கு பதிவாகவில்லை என்பதுதான் சோகம்.

அதிமுக முதல் வெற்றி
வண்ணாரப்பேட்டையாக இருந்த தொகுதி 1977ஆம் ஆண்டு டாக்டர்.ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியாக மாற்றப்பட்டது. இந்த தொகுதியில் திமுக, எம்ஜிஆர் தலைமையில் அதிமுக உருவாகி சிபிஎம்முடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்டது. ஆர்.கே.நகரில் அதிமுக வேட்பாளராக நடிகர் ஐசரிவேலன் போட்டியிட்டார். சென்னை திமுகவின் கோட்டை என்பதை ஆர்.கே.நகர் மாற்றி அமைத்தது. முதன்முறை ஆர்.கே.நகரை அதிமுக கைப்பற்றியது.

திமுக - காங். கூட்டணி
1980ல் அதிமுக ஆட்சி கலைக்கப்பட்டது. இதில் திமுக காங்கிரஸ் கூட்டணி அமைத்துப் போட்டியிட ஆர்.கே.நகர் காங்கிரஸ் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டது. மீண்டும் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஐசரிவேலன் இந்த முறை காங்கிரஸ் வேட்பாளரும் அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்ற தலைவருமான ராஜசேகரனிடம் தோல்வியடைந்தார்.

அதிமுக - காங்கிரஸ் கூட்டணி
1984ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் இந்திரா மரணம், எம்ஜிஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சூழ்நிலையில் ஆர்.கே நகரில் அதிமுக-காங்கிரஸ் கட்சி கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வேணுகோபால் திமுக வேட்பாளர் சற்குணபாண்டியனை தோற்கடித்தார்.

திமுக சற்குண பாண்டியன் வெற்றி
திமுக வேட்பாளர் வெற்றி1989ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் எம்ஜிஆர் மறைவுக்குப் பின் ஜா, ஜெ என இரண்டாக பிளவுபட்டது. இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்ட நிலையில் பொதுத்தேர்தலை சந்தித்த அதிமுக வேட்பாளர் மதுசூதனன், திமுக வேட்பாளர் சற்குணபாண்டியனிடம் தோல்வியடைந்தார்.

சற்குணபாண்டியன் தோல்வி
1991ஆம் நடந்த சட்டசபைத் தேர்தலில் ராஜீவ் மரணம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த அலையில் ஆர்.கே நகரில் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் முதன் முறையாக வென்றார். திமுக வேட்பாளர் சற்குணபாண்டியன் தோல்வி அடைந்தார்.

மதுசூதனன் தோல்வி
1996 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ், திமுக ஓரணியில் இணைந்ததால் தமிழகம் முழுதும் படுதோல்வியை அதிமுக சந்திக்க ஆர்.கே.நகரிலும் தோல்வியைத் தழுவியது. சற்குணபாண்டியன் மதுசூதனனை மீண்டும் தோற்கடித்தார்.

அதிமுகவின் தொடர் வெற்றி
2001ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் மூப்பனார், இடதுசாரிக் கட்சிகள் அதிமுக அணியில் இணைந்து போட்டியிட்டனர். ஆர்.கே.நகரில் அதிமுக வேட்பாளர் சேகர்பாபு வெற்றிபெற்றார். 2006 சட்டசபைத் தேர்தலிலும் அதிமுக ஆர்.கே.நகரை தக்கவைத்தது. 2011 சட்டசபைத் தேர்தலில் சேகர்பாபு திமுகவுக்கு மாறினார். அவர் திமுக வேட்பாளராக ஆர்.கே. நகரில் களமிறங்கினார். அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட வெற்றிவேல் வெற்றிபெற்றார். அதிமுக தொடர்ந்து 3வது முறையாக வெற்றி பெற்றது.

ஜெயலலிதாவின் தொகுதி
ஜெயலலிதாவிற்காக தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தொகுதியை விட்டுகொடுத்தார் வெற்றிவேல்.
2015ல் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா வெற்றி பெற்றார். 2016ல் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட்டது. முதல்வர் தொகுதி என்ற முறையில் விஐபி அந்தஸ்து பெற்ற ஆர்.கே.நகரில் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழனை ஜெயலலிதா தோற்கடித்தார்.

பணமழை
ஜெயலலிதா மரணமடையவே கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஓபிஎஸ் தனி அணியாக களமிறங்கினார். எடப்பாடி டிடிவி தினகரன் ஓரணி என்ற நிலையில் அதிமுக இரண்டு அணிகளாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை சந்தித்தது. இரட்டை இலை முடக்கப்பட்டது. டிடிவி தினகரன் தொப்பி சின்னத்திலும் மதுசூதனன் இரட்டை மின் கம்பத்திலும் போட்டியிட்டார். முதன்முறையாக திமுக சார்பில் மருதுகணேஷ் போட்டியிட்டார் பணமழை காரணமாக தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்.

வரலாறு திரும்புமா?
மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இம்முறையும் பணமே வாக்கு சேகரித்தது. ஆனாலும் தேர்தலை நடத்தியே தீருவோம் என்று கூறி டிசம்பர் 21ஆம் வாக்குப்பதிவு நடைபெற்றது. 1989 ஆம் ஆண்டு எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் நடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட மதுசூதனன் தோல்வியடைந்தார். இப்போது ஜெயலலிதா மரணத்திற்குப் பின்னர் நடந்த தேர்தலிலும் போட்டியிட்டார்.

பறந்த சுயேச்சை கொடி
ஆர்.கே.நகரில் 3 முறை போட்டியிட்ட மதுசூதனன் ஒருமுறை வெற்றி பெற்றுள்ளார். இரண்டு முறை தோல்வியடைந்தார். பலத்த எதிர்ப்பையும் மீறி அதிமுக வேட்பாளராக களமிறங்கினார் மதுசூதனன். ஆனால் 1996 வரலாறு மீண்டும் திரும்பியுள்ளது. இம்முறை வாகை சூடி பட்டாசு வெடித்துள்ளார் சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன். இது சரித்திர சாதனை வெற்றிதான்.












Click it and Unblock the Notifications