ஆர் கே நகரில் போட்டியிட தினகரனுக்கு ஆசையிருக்கு.... ஆனா அதிர்ஷ்டம் இருக்குமா?
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட டிடிவி தினகரனுக்கு ஆசையிருந்தாலும் அதற்கு சீனியர் அமைச்சர்களே முட்டுக்கட்டை போட்டிருக்கிறார்களாம்.
சென்னை: ஜெயலலிதா மறைவையடைந்து காலியாக உள்ள ஆர்.கே. நகர் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட டிடிவி தினகரன் விரும்புவதாகவும், இதனால் உள்ளுக்குள் உதறல் எடுத்த எடப்பாடி பழனிச்சாமியும், சீனியர் அமைச்சர்களும் முட்டுக்கட்டை போட்டிருப்பதாகவும் அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது. தேமுதிக தவிர அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. எனினும் அவரா? இவரா என்ற எதிர்பார்ப்பு இப்போதே தொடங்கி விட்டது.
ஆர்.கே. நகருக்கு ஏப்ரல் மாதம் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 16ம் தேதி வியாழக்கிழமை தொடங்குகிறது.

பிளவுபட்ட அதிமுக
ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுக பிளவுபட்டுள்ளது. சசிகலா தரப்பில் ஒரு அணியினரும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் பிரிந்துள்ளது. ஓபிஎஸ் அணி சார்பில் ஆர்.கே.நகர் பகுதியை சேர்ந்த மதுசூதனன் அல்லது திலகவதி ஐபிஎஸ் போட்டியிடுவார் என்று தெரிகிறது. 4 நாட்களில் வேட்பாளரை அறிவிப்போம் என்று கூறியுள்ளனர். இரட்டை இலை யாருக்கு என்பதுதான் கேள்வி.

தீபாவின் அறிவிப்பு
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தலைமையில் மற்றொரு அணியினரும் செயல்பட்டு வருகின்றனர். ஆர்.கே.நகர் தொகுதியில் தீபா அணி சார்பில், தீபாவே போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சசி அணியில் யார்?
வேட்பாளர் யார் என்பதை ஆட்சிமன்ற குழு கூடி முடிவு செய்யும் என்று அறிவித்தார் டிடிவி தினகரன். ஆனால் தான் போட்டியிட விரும்புவதாக அமைச்சர்களிடம் கூறியுள்ளார். இங்குதான் சிக்கலே தொடங்கியுள்ளது. டிடிவி தினகரன் போட்டியிட்டு ஜெயித்தால் அடுத்தது முதல்வராக ஆசைப்படுவார் என்பதால் எடப்பாடி பழனிச்சாமிக்கு உதறல் ஆரம்பித்து விட்டது.

டிடிவி தினகரன்
ஆர் கே நகரில் வெற்றி பெற்றால் முதல்வர் பதவியை கைப்பற்றி ஆட்சியையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடலாம் என்று கணக்கு போட்டே தனக்கு ஆதரவாக பேச பலரையும் ரெடி செய்து வைத்துள்ளார். அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜயபாஸ்கர், செல்லூர் ராஜு, ஓ.எஸ்.மணியன் ஆகியோர் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்களாம்.

சீனியர் அமைச்சர்கள்
டி.டி.வி.தினகரன் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட கூடாது என அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், தங்கமணி மற்றும் ஜூனியர் அமைச்சர்கள் கூறி வருகிறார்களாம்.
ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி. மக்களின் அதிருப்தியில் ஒருவேளை மண்ணை கவ்விவிட்டால் அசிங்கமாகிவிடும் என்று கூறி தட்டி வைத்திருக்கிறார்களாம்.

அதிர்ஷ்டம் இருக்கா?
அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் ஆட்சி மன்ற குழுவில் விவாதம் செய்து, இறுதி முடிவு எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. கட்சியினர் எதிர்ப்பை மீறி டி.டி.வி.தினகரன் போட்டியிடுவாரா? அல்லது வேறு யாராவது வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவாரா என்பது விரைவில் தெரியவரும். ஆசையிருக்கு அரசாளா... அதிர்ஷ்டம் இருக்க வேண்டுமே!












Click it and Unblock the Notifications