காங்கிரஸில் "வருஷம் 16"... சின்னத் "தம்பி"க்கு சிக்கல் வருமா....?
சென்னை: நடிகர்களை வைத்து திமுக, அதிமுக உள்ளிட்ட பல கட்சிகள் பெரும் லாபம் பார்த்துள்ளன.. இது தமிழக அரசியல் வரலாறு. அதேசமயம், காங்கிரஸ் கட்சிக்கும் நடிகர்களுக்கும் ராசியே கிடையாது என்பதும் ஒரு வரலாறு.
நடிகர்கள் நடமாட்டம் இல்லாத கட்சி என்று தமிழகத்தையும் எதையும் பார்க்க முடியாது - பாமக தவிர. ஒவ்வொரு கட்சிக்கும் இந்த நடிகர், நடிகையர் ஏதாவது ஒரு வழியில் உதவியுள்ளனர், உதவிக் கொண்டுள்ளனர்.
அதேபோலத்தான் காங்கிஸிலும் கூட பல நடிகர், நடிகையர் இருந்துள்ளனர். ஆனால் என்ன காரணத்தாலோ தமிழக காங்கிரஸுக்கும், நடிகர்களுக்கும் பெரிய அளவில் ராசி இல்லை. நடிகர்களால், காங்கிரஸ் தமிழகத்தில் வளர்ந்த வரலாறும் இல்லை என்பதையும் மறுக்க முடியாது. அந்த வகையில் காங்கிரஸ் ரொம்பவே வித்தியாசமான கட்சி.
அந்தக் காலத்து சிவாஜி கணேசனில் ஆரம்பித்து.. இதோ இப்போது குஷ்பு வரை வந்துள்ளது காங்கிரஸின் நடிக அடையாளம்.
குஷ்பு வருகையால் லாபமா
குஷ்பு வருகையால் காங்கிரஸ் லாபம் பெறுமா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். குஷ்பு காங்கிரஸுக்கு வந்துள்ள நேரம்தான் இங்கே கவனிக்கத்தக்கது.
கோஷ்டிப் பூசல் குறைவு
ஜி.கே.வாசன் தரப்பு காங்கிரஸை விட்டு வெளியேறியுள்ள நிலையில் தற்போது தமிழக காங்கிரஸில் கோஷ்டிப் பூசல் கிட்டத்தட்ட அடியோடு குறையும். அதாவது இரண்டே இரண்டு கோஷ்டிகள்தான் இப்போதைக்கு வலுவாக உள்ளன.
ஈஸியாக சமாளிக்கலாம்
இளங்கோவன் கோஷ்டி மற்றும் ப.சிதம்பரம் - கார்த்தி சிதம்பரம் கோஷ்டி என இரண்டு கோஷ்டிகள்தான் இப்போதைக்கு பெரியவர்கள். எனவே இவர்களை சமாளிப்பது ஈசியானது. அதை விட முக்கியமானது, வாசன் வெளியேற்றத்தால் ஏற்பட்டுள்ள ஒரு வெற்றிடத்தை தனது தனிப்பட்ட செல்வாக்கால் இட்டு நிரப்ப முடியும் என்பது குஷ்புவின் கணக்கு.
ஒற்றுமையாவது, புண்ணாக்காவது
மற்றபட தேச ஒற்றுமைக்கு காங்கிரஸ்தான் ஒரே கட்சி என்று குஷ்பு கூறியுள்ளதெல்லாம் வெறும் பேச்சாகத்தான் இருக்க முடியும். உண்மையில் தனது கட்சியின் ஒற்றுமைக்கே அந்தக் கட்சி போராடிக் கொண்டிருக்கிறது. எனவே குஷ்புவின் கூற்று அவருக்கே கூட அன்னியமாகத்தான் இருக்க முடியும்.
இந்த நேரத்தில் புகுந்தால்
தமிழகத்தில் காங்கிரஸ் உண்மையில் பெரும் பலவீனமாக இருக்கிறது. தலைவர்களும் கூட பெரிய அளவில் வலுவானவர்கள் இல்லை. திமுக, அதிமுகவைப் போல அதிகார மையங்கள் இங்கு இல்லை. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் டக்கென்று டெல்லிக்கு எஸ்டிடி போட்டு பேசி விட்டு சரிப்படுத்தி விட்டால் போதும், இங்குள்ளவர்கள் அதைக் கேட்டுத்தான் ஆக வேண்டும். நம் இஷ்டத்திற்கு கோலோச்சலாம். சுதந்திரமாக செயல்படலாம். யாருக்கும் தனித் தனியாக சாமரம் வீச வேண்டாம், அடங்கிப் போக வேண்டாம்.. இப்படி பல விஷயங்களையும் கணக்குப் போட்டுத்தான் குஷ்பு காங்கிரஸுக்கு வந்திருப்பதாக தெரிகிறது.
சீட் நிச்சயம்
தமிழகம் விரைவில் இரண்டு முக்கிய தேர்தல்களைச் சந்திக்கவுள்ளது. ஒன்று, ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல். இன்னொன்று சட்டசபை பொதுத் தேர்தல். பொதுத் தேர்தலுக்கு நாள் உள்ளது. ஸ்ரீரங்கம் தேர்தல் கண்ணுக்கு எட்டும் தூரத்தில் நெருங்கி கொண்டிருக்கிறது.
ஸ்ரீரங்கத்தில் அசத்தினால்
இதில் ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலை தனது செல்வாக்கை நிரூபிக்கும் களமாக குஷ்பு கருத வாய்ப்புண்டு. அந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தன்னாலான கணிசமான வாக்குகளை சேகரித்துக் கொடுத்து, வெல்ல முடியாவிட்டாலும் கூட அட என்று ஆச்சரியப்படும் அளவுக்கு வாக்குகளைத் திரட்டிக் கொடுத்தாலே கூட போதும், குஷ்புவின் செல்வாக்கு காங்கிரஸுக்கு முக்கியமானதாகி விடும்.
ஒரே வேளை அவரே கூட போட்டியிடலாம்
ஒரு வேளை ஸ்ரீரங்கத்தில் அவரே கூட போட்டியிட வாய்ப்பும் உண்டு. அப்படி குஷ்பு போட்டியிட்டால் நிச்சயம் தேர்தல் களம் சூடாகி விடும். திமுக தரப்புக்கு பெரும் நெருக்கடியாகி விடும். பாஜக வேட்பாளர் அடிபட்டுப் போகவும் வாய்ப்புண்டு. அதிமுக, காங்கிரஸ் நேரடி மோதல் என்ற நிலை கூட வரலாம்.
கெத்தான நடிகை
குஷ்புவை வெறும் நடிகை என்று பொத்தாம் பொதுவாக பார்த்து விட முடியாது. நல்ல புத்திசாலி, நிதானமாக பேசக் கூடியவர், தப்பின்றி பேசக் கூடியவர் (தமிழைத் தவிர), அறிவாளி, நிறைய படிப்பவர், நாட்டு நடப்பை நன்றாக புரிந்து வைத்திருக்கக் கூடியவர், சுயமாக சிந்திக்கக் கூடியவர், தனித்து முடிவெடுக்கக் கூடியவர்.. .மொத்தத்தில் ஒரு நோ நான்சென்ஸ் பெண்மணி. இதெல்லாம் நிச்சயம் காங்கிரஸுக்கு உதவும்.
வருஷம் 16 கூட்டணி...!
குஷ்பு காங்கிரஸுக்குள் முறைப்படி வந்து விட்ட நிலையில் ஏற்கனவே காங்கிரஸ் என்ற கோவிலுக்கு வந்து விட்டதாக நடிகர் கார்த்திக்கும் கூறி வைத்துள்ளார். அவர் அவ்வப்போது ஏதாவது ஒரு "கோவிலுக்குப்" போவது வழக்கம்தான் என்றாலும் கூட இந்த முறை, காங்கிரஸ் கோவில்தான் அவரைப் பொறுத்தவரை சவுகரியமானதாக தெரிகிறது. குஷ்புவும் இப்போது காங்கிரஸுக்கு வந்து விட்டதால், இந்த வருஷம் 16 ஜோடி காங்கிரஸ் கட்சியின் இரட்டைக் குழல் துப்பாக்கி போல மேடையேறலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
"தம்பி"க்கு சிக்கல் வருமா...!
இப்படி குஷ்புவும், கார்த்திக்கும் சேர்ந்து காங்கிரஸை பலப்படுத்தும் முயற்சியில் இறங்கினால், தம்பி என்று மூத்தோரால் அன்பாக அழைக்கப்படும் ஜி.கே.வாசன் கட்சிக்கு என்ன மாதிரியான பாதிப்புவரும் என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் வாசன் தரப்புக்கு சரிக்குச் சரியாக, பதிலடி கொடுத்துப் பேசக் கூடியவராக குஷ்பு களம் இறக்கப்படும் வாய்ப்புகளும் உள்ளன என்பதை மறுக்க முடியாது.
பார்க்கலாம்.. வருஷம் 16 ஜோடியால் காங்கிரஸுக்கு சந்தோஷம் கிடைக்குமா என்பதை!