மாணவர்களின் மூளை திறனை அதிகரிக்கும் யோகா - பள்ளி மாணவர்களுக்கு புற்றுநோய் விழிப்புணர்வு
காய்கறிகளை சாப்பிட்டால் படிக்கும் திறன் அதிகரிக்கும், மூளையின் திறன் அதிகரிக்கும் என பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில், இன்று காஸ்மாஸ் அரிமா சங்கம் சார்பில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
காஸ்மாஸ் அரிமா சங்கத்தலைவர் திரு. சார்லஸ் அவர்கள் தலைமையேற்றார்.வட்டாரத் தலைவர் திரு.ஆறுமுகம் அவர்கள் முன்னிலை வகித்தார். பள்ளியின் தலைமையாசிரியர் திரு.ஆ. பீட்டர் ராஜா அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
காரைக்குடி குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர். அறிவழகன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
டாக்டர் பேச்சு
புற்றுநோய் கட்டி உருவாகும் விதம் பற்றியும், புற்றுநோய் கட்டியை ஆரம்பத்திலேயே அறிந்துகொள்ளும் முறை பற்றியும், அதற்கான சிகிச்சை முறைகள் பற்றியும் டாக்டர். அறிவழகன் விரிவாகக் கூறினார்.
அரிமா சங்க குழந்தைகள் புற்றுநோய் விழிப்புணர்வு இயக்க மாவட்டத் தலைவர் இஞ்சினியர். திரு. ராதாகிருஷ்ணன் அவர்கள் பேசுகையில், புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்களைப்பற்றி விளக்கினர்.
படிக்கும் திறன் அதிகரிப்பு
மேலும் உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சி மூலம் நாம் நோயிலிருந்து 80% விடுபடலாம் என்றும், காய்கறிகளை சாப்பிட்டால் படிக்கும் திறன் அதிகரிக்கும், மூளையின் திறன் அதிகரிக்கும் எனவும் வாழும்போது ஆரோக்கியமாக வாழ யோகா, உடற்பயிற்சி செய்யவேண்டும் என்றும் பேசினார்.
புற்றுநோய் விழிப்புணர்வு
நிகழ்ச்சியில் காஸ்மாஸ் அரிமா சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் பட்டதாரி ஆசிரியர் திருமதி. விஜயலட்சுமி அவர்கள் நன்றி கூறினார். பட்டதாரி ஆசிரியர் திரு. முத்துவேல்ராஜன் அவர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
உணவு, யோகா
பள்ளிகளில் பாடங்களுடன் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு, யோகா, உடற்பயிற்சி, சத்தான காய்கறிகள் பற்றியும் விளக்கம் அளித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டதற்கு பெற்றோர்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.