குருபூஜை, சாதி மாநாடுகளைத் தடை செய்ய முடியாது- உயர்நீதிமன்றம்
சென்னை: ஜாதி அமைப்புகள் நடத்தும் மாநாடுகள், குருபூஜை போன்றவற்றைத் தடுக்க முடியாது, தடை செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இவற்றுக்குத் தடை விதிக்கக் கோரி வராஹி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அதில்,
தமிழகத்தில் சாதி ரீதியிலான தலைவர்களின் குருபூஜைகள், மாநாடுகள் நடக்கிறது. தென் மாவட்டத்தில் நடந்த ஒரு சாதி தலைவரின் குருபூஜையால் கடந்த 3 ஆண்டுகளில் 28 கொலைகள் நடந்தன. ரூ.200 கோடி சொத்துக்கள் சேதம் அடைந்தது.
எனவே தமிழகத்தில் சாதி ரீதியிலான குருபூஜைகள், மாநாடுகள் நடத்த தடைவிதிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி ராகேஷ் அகர்வால், நீதிபதி சத்தியநாராயண் ஆகியோர் அடங்கிய முதன்மை பெஞ்ச் விசாரித்து இன்று தீர்ப்பளித்தது. அப்போது, கடந்த ஆண்டு நடந்த குருபூஜையில் எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை. சட்டம்- ஒழுங்கை சரியாக அமல்படுத்தினால் வருங்காலத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படாது.
எனவே தமிழக அரசு சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் அமைதியாக நிகழ்ச்சிகள் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே மனுவை தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.