காவிரி: தமிழகம், புதுவையில் முழு அடைப்பு- பேருந்துகள் குறைந்த அளவில் இயக்கம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம், புதுவையில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
சென்னை/புதுச்சேரி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக விடுத்திருந்த முழு அடைப்புப் போராட்டம் காலை 6 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பெரும்பாலான இடங்களில் குறைவான பேருந்துகளே இயக்கப்படுகின்றன.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த 5 நாட்களாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
மத்திய அரசு அலுவலகங்கள் பல இடங்களில் இழுத்து மூடப்பட்டு வருகின்றன. ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. பல்வேறு அமைப்புகளின் சார்பில் முழு அடைப்புப் போராட்டமும் நடத்தப்பட்டன.
இந்த நிலையில் தமிழகம் தழுவிய முழு அடைப்புப் போராட்டத்துக்கு திமுக இன்று அழைப்பு விடுத்திருந்தது. இப் போராட்டத்துக்கு வணிகர் சங்கங்கள், போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்தன.
இன்று காலை 6 மணி முதலே பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அதேபோல் பேருந்துகளும் மிகவும் குறைவான அளவிலேயே இயக்கப்பட்டு வருகின்றன.
தமிழகம்- கர்நாடகா எல்லையான ஓசூரில் இரு மாநில பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. அசம்பாவிதங்கள் நடக்காத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.