காவிரிக்காக களமிறங்கிய அரசியல் தலைவர்கள் முதல் சினிமா கலைஞர்கள் வரை.. ஒரு ரவுண்ட் அப்
சென்னை: காவிரி நதிநீர் பிரச்சினை தமிழகம் கர்நாடகம் இடையேயான ஒரு நூற்றாண்டுகால பிரச்சினையாக இருந்தாலும் கடந்த 30 ஆண்டுகாலமாகத்தான் தீவிரமடைந்துள்ளது. 1991ம் ஆண்டுக்குப் பிறகு இரு மாநிலங்களிலும் பற்றி எரியும் பிரச்சினையாக மாறி வருகிறது. காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி தமிழக விவசாயிகள் முதல் அரசியல்வாதிகள், திரைப்பட நடிகர்கள் வரை போராட்டம் நடத்தியுள்ளனர்.
வருணபகவானின் கருணையினால் சில ஆண்டுகளாக ஓய்ந்திருந்த காவிரி நதிநீர் பிரச்சினை, இப்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த 25 தினங்களாக தமிழகம் - கர்நாடகா இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கோரி உச்சநீதிமன்றம் கர்நாடக மாநிலத்திற்கு கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் பிரதமர் தேவகௌடா பெங்களூருவில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
காவிரிக்காக இனி சண்டை போட்டால் நான் உண்ணாவிரதம் இருப்பேன் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி கூறி வந்த நிலையில் தற்போது உச்சநீதிமன்றத்தின் கண்டிப்பான உத்தரவை எதிர்த்து போராடி வருகிறார் தேவகௌடா.
• தமிழகத்தில் காவிரி நதிநீருக்காக 1993, 2007ம் ஆண்டுகளில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார் முதல்வர் ஜெயலலிதா.
• 2002ம் ஆண்டு அக்டோபரில் தமிழ் நடிகர்கள் இயக்குநர்கள் நெய்வேலியில் சென்று கர்நாடகாவிற்கு மின்சாரம் தரக்கூடாது என்று போராட்டம் நடத்தினர்.
• அதே வருடம், அதே மாதம், நெய்வேலி போராட்டத்திற்கு 2 நாட்கள் கழித்து, நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.
* இவ்வாண்டு பெங்களூரில் கன்னட திரையுலகினர் தமிழகத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினர். ஆனால் நாசர் தலைமையிலான தென்இந்திய நடிகர் சங்கம், கர்நாடகாவுக்கு எதிராக போராட மாட்டோம் என கூறிவிட்டது.