அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுவது அர்த்தமற்றதா?: ஜெ.வுக்கு கருணாநிதி கண்டனம்
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகளின் கருத்துக்களைக் கேட்க வேண்டும் என்பது அர்த்தமற்ற செயல் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ள கருத்துக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக அனைத்துக் கட்சிகளையும் அழைத்து ஆலோசனை நடத்தி ஒரே கருத்தைத் தெரிவித்தால், அது தமிழக முதல்வருக்கு வலு சேர்ப்பதாகத்தான் அமையும். இதே விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.
அனைத்துக் கட்சிகளின் கருத்துக்களைக் கேட்க வேண்டும் என்பது அர்த்தமற்ற செயல் என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார். அப்படியானால், சித்தராமையாவின் செயல் அர்த்தமற்றதா? காவிரி நதிநீர் தொடர்பான வழக்கை தி.மு.க. அரசு திரும்பப் பெற்றதற்கு அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியின் ஆலோசனையே காரணம்.
அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட மறுப்பதன் மூலம், தனக்கு மிஞ்சி எதுவும் இல்லை, தனக்குத் தெரியாதது ஒன்றுமில்லை என்ற எண்ணத்தோடு ஜெயலலிதா செயல்படுகிறாரா? என்பதை தமிழக மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications