மழையையும் பொருட்படுத்தாது கடலூரில் டிஎஸ்பி விஷ்ணுப்ரியாவின் பெற்றோரிடம் சிபிசிஐடி விசாரணை
கடலூர்: டி.எஸ்.பி. விஷ்ணு ப்ரியாவின் தற்கொலை குறித்து அவரது பெற்றோரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் மூன்று மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
திருச்செங்கோடு டி.எஸ்.பி.யாக இருந்தவர் விஷ்ணு ப்ரியா. அவர் கடந்த செப்டம்பர் மாதம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். என்ஜினியர் கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த அவருக்கு உயர் அதிகாரிகள் அளித்த நெருக்கடியால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்பட்டது.
விஷ்ணு ப்ரியா தற்கொலை வழக்கு நியாயமாக நடக்க அதை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று அவரது தந்தை ரவி வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் அந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
சிபிசிஐடி அதிகாரிகள் வியாழக்கிழமை கடலூரில் உள்ள விஷ்ணு ப்ரியாவின் விட்டிற்கு சென்றுள்ளனர். மதியம் 3 மணியில் இருந்து சுமார் 3 மணிநேரம் அவர்கள் விஷ்ணு ப்ரியாவின் தந்தை மற்றும் தாயிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.
கனமழையால் கடலூர் வெள்ளத்தில் மிதக்கும் சூழலிலும் அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.