அக்ரி கிருஷ்ணமூர்த்தியிடம் விசாரணை இல்லை- சிபிசிஐடி: அப்போ 'கேஸ்' அவ்ளோ தானா?
நெல்லை: வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்கும் திட்டமில்லை என்று சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி உயர் அதிகாரிகளின் நிர்பந்தம், நெருக்கடியை தாங்க முடியாமல் கடந்த பிப்ரவரி மாதம் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வந்த நிலையில் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் அரசோ வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியது.
சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி முத்துக்குமாரசாமியை தற்கொலைக்கு தூண்டியது, கூட்டுச் சதி, ஊழல் தடுப்பு ஆகிய 3 பிரிவுகளில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்குப் பதிவு செய்து அவரை கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். அவருடன் தலைமை பொறியாளர் சொந்திலும் கைது செய்யப்பட்டார். அவர்கள் இருவரும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
செந்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஜாமீன் கோரவில்லை. இந்நிலையில் சிபிசிஐடி போலீசார் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின.
அக்ரி கிருஷ்ணமூர்த்தியிடம் விசாரித்து வாக்குமூலம் வாங்கிவிட்டதால் அவரை தங்கள் காவலில் எடுக்க திட்டமிடவில்லை என்று சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். அவரை தொடர்ந்து விசாரிக்கப் போவது இல்லை எனில் இந்த வழக்கை பாதியிலேயே விட்டுவிடப் போவதாக மறைமுகமாக தெரிவிக்கிறார்களா என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.