20 தமிழர் படுகொலை: சி.பி.ஐ. விசாரணை கோரி சென்னையில் 28-ல் பேரணி-வைகோ, திருமா, வேல்முருகன் அறிவிப்பு!
சென்னை: ஆந்திராவால் 20 தமிழர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்தக் கோரி சென்னையில் 28-ந் தேதி பேரணி நடத்தப்படும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.
20 தமிழர் படுகொலை விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து 150க்கும் மேற்பட்ட கட்சிகள், அரசியல் இயக்கங்களின் கூட்டமைப்பான தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வைகோ, திருமாளவன், வேல்முருகன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், இயக்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தின் முடிவில் 20 தமிழர் படுகொலை குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் 28-ந் தேதி பேரணி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனை செய்தியாளர்களிடம் வைகோ, திருமாவளவன், வேல்முருகன் ஆகியோர் கூட்டாக தெரிவித்தனர். சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் இருந்து கிண்டி ஆளுநர் மாளிகை வரை இந்த பேரணி நடத்தப்பட உள்ளது.
இப்பேரணியின் முடிவில் 20 தமிழர் படுகொலைக்கு நீதி விசாரணை தேவை என்றும் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி ஆளுநர் ரோசைய்யாவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட உள்ளது.