வீழ்ந்தார் ராஜபக்சே.. எழுச்சியோடு பொங்கலைக் கொண்டாடுவோம்.. திருமாவளவன் அழைப்பு
சென்னை: ராஜபக்சேவுக்கு ஜனநாயக முறைப்படி தண்டனை கிடைத்து விட்டது. சட்டப்படியும் அவர் தண்டிக்கப்படுவார். அவரது வீழ்ச்சியை தமிழர்கள் பொங்கல் திருநாளன்று எழுச்சியோடு கொண்டாட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் தைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா நேற்று கட்சி அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இதற்காக சென்னை அசோக்நகர் அம்பேத்கர் திடலில் கரும்பு, மஞ்சள் குலை அலங்கார தோரணம் அமைக்கப்பட்டிருந்தது. வண்ண ஓவியம் தீட்டப்பட்ட மண்பானைகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தொண்டர்களுடன் பொங்கலிட்டு கொண்டாடினார்.
அப்போது தொண்டர்களுக்கு கரும்பு, வெண்பொங்கல் ஆகியவற்றை வழங்கி வாழ்த்தினார். பானையில் பொங்கல் பொங்கியபோது, பொங்கலோ பொங்கல் என்று குரல் எழுப்பினார்கள். இதில், கவிஞர் அறிவுமதி, பாடலாசிரியர்கள் விவேகா, இளையகம்பன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் திருமாவளவன் நிருபர்களிடம் பேசுகையில், ராஜபக்சே படுதோல்வி அடைந்தது தமிழர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. முள்ளி வாய்க்கால் சம்பவத்துக்குப் பிறகு 5 ஆண்டுகள் அங்கு பொங்கல் விழா கொண்டாடப்படவில்லை. ராஜபக்சே வீழ்ச்சியை கொண்டாடும் வகையில் இந்த ஆண்டு அங்கு தமிழர்கள் பொங்கல் விழாவை எழுச்சியுடன் கொண்டாடுகிறார்கள். இதை அனைத்து தமிழர்களும் பொங்கலிட்டு கொண்டாட வேண்டும்.
ராஜபக்சேவுக்கு தற்போது ஜனநாயக ரீதியாக தண்டனை கிடைத்து இருக்கிறது. சட்டப்படி அவருக்கு தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை தமிழர் பிரச்சினையில் ராஜபக்சே, சிறிசேனா இருவரின் எண்ணங்களும் ஒன்றுதான். அவர் தமிழர்களுக்கு நன்மை செய்வார் என்று எதிர்பார்க்க முடியாது. சிறிசேனா எப்படி செயல்படுவார் என்று பொருத்து இருந்தான் பார்க்க வேண்டும்.
மதவாத சக்திகள் தமிழ் கவிஞர்கள் திருவள்ளுவர், பாரதியார் பெயரை சொல்லி தமிழ்நாட்டில் காலூன்ற பார்க்கிறார்கள். இதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். பெரியார் பிறந்த மண்ணில் மதவாத சக்திகளை அனுமதிக்கக் கூடாது என்றார் அவர்.