முடிவுக்கு வந்தது இழுபறி.. மதுரையில் அமைகிறது எய்ம்ஸ் மருத்துவமனை.. தென் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
Recommended Video
மதுரை: எங்கே அமையும் என்பதில் பெரும் இழுபறி நீடித்த நிலையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது என்று வருவாய் துறை அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் சகல மருத்துவ வசதிகளும் கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், மருத்துவமனையை எங்கே அமைப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டது.
தமிழகத்தில் ஈரோடு, மதுரை, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 5 இடங்கள் தேர்வு செய்து தமிழக அரசு அறிக்கை அளித்தது. அந்த இடங்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்திருந்தனர். ஆனால், உறுதியான அறிவிப்பு மட்டும் வெளியாகவில்லை.
அமைச்சர் உறுதி
இந்த நிலையில், மதுரை,தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது என்று வருவாய் துறை அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் தெரிவித்துள்ளார். தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த சிறப்பு பேட்டியில், இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.
தோப்பூரில் மருத்துவமனை
தோப்பூரில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் ஒருசில தினங்களில் மத்திய அரசிடமிருந்து முறைப்படியாக இதுபற்றிய அறிவிப்பு வெளியாக இருப்பதாக தெரிகிறது. தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை இதன் மூலம் நிறைவேறப்போகிறது.
பொதுநல வழக்கு
எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடம் தொடர்பாக மத்திய அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்ததால், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கே.கே.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
உயர்மட்ட கூட்டம்
இந்த நிலையில் 'எய்ம்ஸ்' தேர்வுக்குழு உயர்மட்டக் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், மருத்துவமனை அமைய ஏற்ற இடம் மதுரைதான் என முடிவு செய்யப்பட்டுஉள்ளது. இதை நீதிமன்றத்திலும் மத்திய அரசு தெரிவிக்கும் என தெரிகிறது. இந்த தகவல்தான் தமிழக அரசுக்கும் கொடுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.